காஞ்சியில் பொற்றாமரை குளத்தில் அவதரித்த பொய்கை ஆழ்வார்
சென்னை: சென்னை 2000 + அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் பொய்கை ஆழ்வார் சிறப்பு சொற்பொழிவு ஜனவரி 20ம் தேதி மாலை 7.45 மணிக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடைபெற உள்ளது.
ஆழ்வார்களின் பெருமையை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சென்னை 2000 + அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் இனைந்து 12-மாத ஆழ்வார்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை கடந்த நவம்பர் முதல் நடத்தி வருகின்றனர்.
ஆழ்வார்கள் பன்னிருவர்
1) பொய்கை ஆழ்வார், 2) பூதத்தாழ்வார், 3) பேயாழ்வார், 4) திருமழிசை ஆழ்வார், 5) நம்மாழ்வார், 6) திருமங்கையாழ்வார், 7) தொண்டரடிப் பொடி ஆழ்வார், 8) பெரியாழ்வார், 9) ஸ்ரீ ஆண்டாள் 10) குலசேகர ஆழ்வார், 11) மதுரகவி ஆழ்வார், 12) திருப்பாணாழ்வார்.
முதலாம் ஆழ்வார்களில் மூவர் பொய்கையாழ்வார் , பூதத் தாழ்வார் , பேயாழ்வார் ,பாடிய பாடல்கள் முதல் திருவந்தாதி , இரண்டாம் திருவந்தாதி , மூன்றாம் திருவந்தாதி என நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ளது.
காஞ்சியில் பொய்கையில் அவதரித்த பொய்கையாழ்வாரும் , மறு தினம் திருகடல் மல்லை எனும் மாமல்ல புரத்தில் அவதரித்த பூதத்தாழ்வாரும் , திருமயிலையில் அதற்கு மறு நாள் ஒரு கிணற்றில் அவதரித்த பேயாழ்வார், இவர்கள் மூவரும் சிலை வடிவில் அர்ச்சனைக்குரிய மூர்த்தியாக ஆங்காங்கே கோயில்களில் வரும் பக்தர்களை தம் குழந்தையென எண்ணி அவர்தம் கஷ்டங்கள் நீக்கி , அவர்கள் விரும்பும் வரத்தை அருள வீற்றிருக்கும் திருமாலின் அழகு , அவர் தம் எளிமையை , அவரின் அடியார்களாக , அவரின் புகழை தம் பாடல்களில் பாடியுள்ளனர்.
பொய்கை ஆழ்வார் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள திருவெஃகா திருத்தலத்தில், பொற்றாமரைக் குளத்திலே தாமரைப் பூவில் அவதாரம் செய்தார். ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரம். திருமாலின் பாஞ்சசன்னிய அம்சமாகத் தோன்றியவர். அருளியுள்ள பிரபந்தம் "முதல் திருவந்தாதி" என்று அழைக்கப்படுகிறது. அந்தாதி அமைப்பில் 100 பாசுரங்கள் கொண்ட இந்த பிரபந்தத்தில், திருவரங்கம், திருவிண்ணகர், திருக்கோவலூர், திருவெஃகா, திருவேங்கடம், திருப்பாற்கடல், பரமபதம் முதலிய திவ்ய தேசங்கள் குறித்து பாடியுள்ளார்.
பொய்கை ஆழ்வாரின் சிறப்புகளை டாக்டர் எம் எ வேங்கடக்ருஷ்ணன் அவர்கள் ஜனவரி 20ம் தேதி இரவு 7.45 மணிக்கு அழகாக எடுத்து கூற இருக்கிறார். திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் நடைபெற உள்ள ஆழ்வார்கள் சொற்பொழிவு நிகழ்ச்சியை கேட்க அழைக்கிறது சென்னை 2000 ப்ளஸ் நிறுவனம்.