எலி மருந்து விஷம் தடவிய கேக் சாப்பிட்ட 8 வயது சிறுவன் பரிதாப மரணம்.. கயத்தாறு அருகே சோகம்
எலிமருந்து தடவிய கேக் சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தான்.
Recommended Video
கயத்தாறு: எலியை பிடிக்க எலிமருந்து விஷம் தடவி வைக்கப்பட்ட கேக்கை எடுத்து சாப்பிட்ட 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கயத்தாறு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கயத்தாறு அருகே உள்ள கிராமம் தலையால் நடந்தான்குளம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பெயர் தெய்வம். இவர் வீட்டில் பல நாட்களாக எலி தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் எலிகளை ஒழிக்க, கடந்த 2 இரு தினங்களுக்கு முன்பு எலிமருந்து விஷம் தடவிய கேக்கை வாங்கி வந்தார். அதனை எலிகள் வந்து செல்லக்கூடிய மறைவான பகுதிகளில் வைத்தார். இந்த கேக்கை சாப்பிட்டு எலிகளும் பல இறந்தன.
அதனால் மீண்டும் இதேபோல் விஷம் தடவிய கேக்கை வைத்தால், இருக்கும் மீதமுள்ள எலிகளும் இறந்துவிடும் என்று நினைத்து, அதேபோல, கேக்கை நேற்று முன்தினம் வாங்கி வந்தார். ஆனால் எல்லா எலிகளும் அன்றே இறந்துவிட்டதால், வேறு எலிகள் எதுவும் சிக்கவில்லை. அதனால் அந்த கேக்கை எடுத்து போடாமல் வைத்த இடத்திலேயே அப்படியே மறந்து விட்டுவிட்டார்.
இந்த நிலையில் அவரது 8 வயதான மூத்த மகன் முத்து வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது, எலிக்கு வைக்கப்பட்ட கேக் இருப்பதை பார்த்ததும் ஆசையாக எடுத்து சாப்பிட்டுவிட்டான். ஆனால் வாயில் நுரை தள்ளி கீழே சிறுவன் சுருண்டு விழுந்தான். இதனை கண்டு பதறியடித்த குடும்பத்தார் முத்துவை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முத்து உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.