கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி- தலப்பாகட்டி பிரியாணி ஹோட்டல் ஊழியர்கள் 3 பேர் கைது!
சென்னை: சென்னை துரைப்பாக்கம் அருகே காரப்பக்கத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் போது விஷவாயு தாக்கியதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்த திண்டுக்கல் தலப்பாகட்டி ஹோட்டல் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை புறநகரான துரைப்பாக்கத்தை அடுத்த காரப்பக்கத்தில் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஹோட்டல் இயங்கி வருகிறது. இதில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்துவதற்காக குமார், சரவணன், வேல்முருகன் ஆகியோர் அழைத்துவரப்பட்டனர்.
முதலில் குமார் என்ற தொழிலாளி கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினார். ஆனால் அவர் நீண்டநேரமாக வெளியே வராததால் சரவணன், வேல்முருகன் ஆகியோர் அடுத்தடுத்து உள்ளே இறங்கினர். பின்னர் ராஜேஸ் என்ற ஹோட்டல் ஊழியரும் உள்ளே இறங்கினார்.
இவர்கள் 4 பேரும் நீண்டநேரமாக வெளியே வராததால் ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் கழிவுநீர் தொட்டியில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கழிவுநீர் தொட்டியில் உள்ளே இறங்கிய 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். 4 பேரும் விஷவாயு தாக்கியதில் அடுத்தடுத்து உயிரிழந்தது தெரியவந்தது.
இதில் பலியான சரவணனுக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றிருந்தது. இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே 4 தொழிலாளர்கள் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் சென்னையில் போராட்டங்களையும் நடத்தினர். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் தலப்பாகட்டி ஹோட்டல் ஊழியர்கள் நவீன், சரவணன், தினகரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.