தர்மபரி மாவட்டம் முழுவதிலும் 144 தடை.. ஜூலை 10ம் தேதி வரை!
தர்மபுரி: இளவரசனின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி பதட்டம் நிலவுவதால், தர்மபுரி மாவட்டத்தில் ஜூலை 10ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் போலீஸ் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இளவரசனின் முதலாமாண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தர்மபுரியில் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு தர்மபுரி தாலுகாவுக்கு மட்டும் 144 தடை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘'தருமபுரி அருகே நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனின் நினைவு தினமான வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 4) பல்வேறு அரசியல் அமைப்புகள், சாதி சங்கங்கள் வரவுள்ளதால் மீண்டும் சாதிப் பிரச்னை மேலோங்கி வன்முறை ஏற்படவும், அதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு தருமபுரி, அரூர் வட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்னை மற்ற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதால் மாவட்டம் முழுமைக்கும் வருகிற 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், சாலை மறியல், பொதுக்கூட்டம் போன்றவை நடத்தவும், அதில் பங்கேற்கும் நோக்கில் மாவட்டத்துக்குள் எவரும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.