வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாள்: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு!
தூத்துக்குடி: வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 27-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சென்னையில் நடந்த போலீஸ் என்கவுண்டரில், வெங்கடேஷ் பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது சமாதி திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன்புரம் கிராமத்தில் உள்ளது. நாளை பண்ணையாரின் நினைவு தினம் வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரத்தில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் என்.வெங்கடேச பண்ணையாரின் 13-வது ஆண்டு நினைவு தினம் 26-ந் தேதி (திங்கட்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான மக்கள் கலந்து கொள்வார்கள்.
கடந்த ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு, விழா அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்பதற்காக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 முதல் 27-ந் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் ஊர்வலமாக வருவதற்கும், 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடுவதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக நினைவு தின நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் நடத்துவதற்கும், அன்னதானம் அளிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது. அவ்வாறு நடத்த இருந்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை அணுகி முன் அனுமதி பெற வேண்டும். இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதிசடங்கு போன்ற ஊர்வலங்களுக்கு பொருந்தாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.