முதியவரை அசிங்கமாக திட்டி தரதரவென இழுத்து சென்ற போலீஸ்காரர்! மதுரை விவசாயிகள் போராட்டத்தில் பரபரப்பு
மதுரையை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனை தடுக்க முயன்ற போலீஸ் உதவி ஆய்வாளர் அருண், முதியவரை தகாத வார்த்தையால் திட்டி அவரை தரதரவென இழுத்துச்சென்றார
மதுரை : மதுரையை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதனை தடுக்க முயன்ற தல்லாகுளம் காவல் உதவி ஆய்வாளர் போராட்டத்தில் வயது முதிர்ந்த விவசாயி ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு தரதரவென இழுத்துச் சென்றார்.
மதுரை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், தற்கொலை செய்துகொண்ட விவாசாய்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் நேற்று அங்கு திரண்டனர். அப்போது அங்கு வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்க மாநில செயற்குழு மூத்த உறுப்பினர் கந்தசாமி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த தல்லாகுளம் உதவி ஆய்வாளர் அருண், அவரை அசிங்கமாக திட்டினார்.
மேலும் அந்த வயத முதிர்ந்த விவசாயியை தள்ளி விட்டு தரதரவென இழுத்து சென்றார். அப்போது கந்தசாமி ஏப்பா நான் உன் அப்பா மாதிரி இருக்கேன், உங்களுக்கும் சேர்த்து தானே நாங்கள் போராடுகிறோம் என்றார்.
அதற்கு நீ ஒன்றும் கிழிக்க வேண்டாம் என்று கூறி தர தரவென இழுத்து சென்றார். இது அங்கிருந்த அனைவரையும் கலங்க செய்தது.
போலீசாரின் நடவடிக்கையைக்கண்டு முகம் சுளித்த பொதுமக்கள் அரசியல் வாதிகளுக்கு சல்யூட் அடிக்கும் இவர்கள், சோறுபோடும் விவசாயிகளை நாயை விட கேவலமாக நடத்துவதாக குற்றம்சாட்டினர். கொஞ்சம் கூட மனிதாபிமானமின்றி அவர்கள் நடந்து கொள்வதாகவும் சாடினர்.