நீட் போராட்டத்தின்போது, நாய்களை போல மாணவர்களை காவல்துறை நடத்துவதா.. முத்தரசன் கடும் கண்டனம்
நீட் போராட்டத்தில் நாய்களை அடிப்பது போல மாணவர்களிடம் காவல்துறை நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்க மாணவர்களை நாய்களை அடிப்பது போல அடித்து காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சென்னை அண்ணா நகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலக முற்றுகைப் போராட்டத்தை இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் நடத்தினர்.
இந்நிலையில், போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். இதில் மாணவர்கள் மற்றும் போலீஸாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளையும் பெண்கள் என்று பாராமல் தரதரவென இழுத்துச் சென்று போலீஸார் கைது செய்தனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. ஒரு மாணவி மயக்கம் அடைந்தார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், அறவழியில் போராட்டம் நடத்திய மாணவர்களிடையே காவல்துறை அராஜகப்போக்கை கையாண்டுள்ளது.
நீட் மரணங்கள் தொடர்ந்து தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது, பல இடங்களில் தமிழக மாணவர்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டு இருக்கிறார்கள். அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக கைது செய்துள்ளனர்.
மத்திய அரசையும் , மாநில அரசையும் திருப்திபடுத்த வேண்டி போராட்டம் நடத்திய மாணவர்களை நாய்களை அடிப்பது போல காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. இதற்கான விளைவுகளை தமிழக அரசு விரைவில் சந்திக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.