ஜல்லி்க்கட்டு புரட்சி.. மக்கள் மனதில் இடம்பிடித்த போலீஸ்காரர் மாயழகு மீது துறை ரீதியிலான நடவடிக்கை!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற காவலர் மாயழகு மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை : ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்கள் மத்தியில் காக்கி உடையணிந்து வந்து ஆதரவுக்குரல் கொடுத்த காவலர் மாயழகு மீது துறை ரீதியான நடவடிக்கை பாய்ந்துள்ளது.
இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் மாணவர்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி நடத்திய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம். சென்னை மெரினா கடற்கரையில் பலதரப்பட்ட மக்களும் ஒன்று கூடி ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று ஒரே குரலில் ஓங்கி ஒலித்தனர்.
இந்த போராட்டத்தின் போது சகோதரத்துவம், இளைய சமுதாயத்தின் ஒழுக்கம் என அனைத்துமே அனைவராலும் பாராட்டு பெற்றது. ஜாதி, மதங்களை மறந்து தமிழர் என்ற ஒற்றை அடையாளத்துடன் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்பை அளித்தனர்.
போராட்டக்களத்தில் பேசிய மாயழகு
இதே போன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாற்று உடையில் பங்கேற்று தனது பங்களிப்பை அளித்தார் காவலர் மாயழகு. அடுத்த நாளே தான் சீருடையில் இருப்பதையும் மறந்து காக்கி உடையிலேயே வந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் தானும் பங்கேற்பதாகத் தெரிவித்தார்.
மாணவர்கள் ஆதரவு
மாயழகின் இந்த பேச்சு மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்தது. இதே போன்று மாயழகு வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலானது. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று மாணவர்கள் ஆதரவளிக்கும் வகையில் அனைவரின் அபிமானத்தையும் பெற்றார் அந்த போலீஸ்காரர்.
துறை ரீதியான நடவடிக்கை
ஆனால் அப்போது ஒன்றும் செய்யாமல் விட்ட காவல்துறையானது தற்போது அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கையை எடுத்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான விசாரணை முடியும் வரை ஆயுதப்படை காவலர் மாயழகுக்கு பதவி, ஊதிய உயர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏன் நடவடிக்கை?
ஏறத்தாழ 10 மாதங்கள் ஆறப்போட்டு இந்த விஷயத்தில் தற்போது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது. மாயழகு மீதான துறை ரீதியான நடவடிக்கை பூதாகரமாகாமல் இருக்க இந்த நடவடிக்கையை பரிசீலிக்குமா அரசு.