காஞ்சியை கலக்கிய டான் ஸ்ரீதர் தற்கொலைக்கு காரணம் என்ன?
சென்னை: ரியல் எஸ்டேட் தாதாவான தனபாலன் ஸ்ரீதர், தமிழகத்தின் தாவூத் என அழைக்கப்பட்டவர். இவர் மீது 7 கொலை, 14 கொலை முயற்சி, ஆட்கடத்தல் உள்பட 43 வழக்குகள் இருக்கிறது.
போலீசார் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டதை அறிந்த ஸ்ரீதர், 2013ல் துபாய்க்கு தப்பியோடினார். ஆனால், இன்டர்போல் மூலம் இவருக்கு குடைச்சலை கொடுத்தது காவல்துறை. இன்டர்போல் இவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
இதனால், கடந்த ஆண்டு இவர் மலேசியா தப்பிச் சென்றதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. ஸ்ரீதருக்கு தமிழகத்தில் ரூ.150 கோடி மதிப்புக்கு சொத்து உள்ளது. இவரை தமிழகம் வரவைக்க அமலாக்கத்துறை மூலம், சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்தனர் போலீசார்.
சொத்துக்களை மனைவி பெயரில் குவித்தார்
சாராய வியாபாரி, சக்கவர்த்தியிடம் அடியாளாக சேர்ந்து பின்னர் அவரது மகளையே திருமணம் செய்து கொண்டு தனிப் பெரும் கள்ளச்சாராய வியாபாரியாக உருவெடுத்தவர் ஸ்ரீதர். எனவே, ஸ்ரீதரின் மனைவி குமாரியின் பெயரில்தான் அதிகப்படியான சொத்துக்களை வாங்கி குவித்திருந்தார். சுமார் 80 சதவீத சொத்துக்கள் மனைவி பெயரில்தான் உள்ளனவாம்.
அமலாக்கத்துறை பிடியில் மனைவி
இந்த நிலையில், குமாரியை சென்னையில் வைத்து கடந்த ஆண்டு நவம்பரில் அமலாக்கத்துறை கைது செய்தது. இதேபோல ஸ்ரீதர் மகனும் காவல்துறை விசாரணை வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.
ஸ்ரீதருக்கு இரட்டை அடி
தமிழகத்தில் தனது குடும்பத்திற்கு காவல்துறை நெருக்கடி கொடுத்துவந்த நிலையில், சர்வதேச அளவில் இன்டர்போல் தனக்கு நெருக்கடி கொடுப்பதால் நெருக்கடிக்குள்ளான ஸ்ரீதர், சரணடையத் தயார் என மீடியாக்கள் மூலம் தூதுவிட்டார்.
ஸ்ரீதர் தற்கொலைக்கு காரணம்?
ஆனால் காவல்துறை தன்னை என்கவுண்டர் செய்யத்தான் ரெடியாக உள்ளது என்று சந்தேகித்த ஸ்ரீதர், இந்தியா வராமல் பதுங்கியிருந்தார். இந்த நிலையில், நெருக்கடிகளால் மனமுடைந்த ஸ்ரீதர், கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.