கடைக்கு வெளியே கேமரா கட்டாயம்: சென்னை நகை கடை அதிபர்களுக்கு போலீஸார் அதிரடி உத்தரவு
நகைக்கடைகளுக்கு வெளியே காமிராவை பொருத்த வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை: நகைகடைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் காமிராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று போலீஸார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக நகை கடைகள், வங்கிகளில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றதை தொடர்ந்து போலீசார் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
நொளம்பூர் காவல் நிலையத்தில் நகை கடை, மற்றும் அடகு கடை அதிபர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த அடகு கடை உரிமையாளர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கடைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கேமராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கடைக்கு தரமான பூட்டுக்களையே பயன்படுத்த வேண்டும் என்றும், வேலை செய்பவர்கள் பற்றி முழு விவரங்களை உரிமையாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், பழைய நகைகளை யாராவது விற்பனை செய்ய வந்தலோ சந்தேகத்திற்குரியவர்கள் யாராவது கடைக்கு வந்தாலோ தங்களை தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இதற்கான நடவடிக்கைகளை கூடுதல் கமிஷனர்கள் சாரங்கன், ஜெயராமன் ஆகியோர் இந்தப் பணிகளை முடுக்கி விட்டுள்ளதுடன், சென்னையில் அனைத்து காவல்நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் இது தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே நொளம்பூர் பகுதியில் பொது இடங்களில் 200 இன்டர்நெட் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை கண்காணிப்பு அறையில் இருந்தே போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.