சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு- 4 குடும்பங்கள் தீக்குளிக்க முயற்சி
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து குடும்பத்தோடு சிலர் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
Recommended Video
சேலம் : சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சில இடங்களில் விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.
5 மாவட்டங்களின் வழியாக சென்னை வந்தடையும் இந்த 8 வழிச்சாலைக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 8 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும், இந்தப் பாதையில் ஆறுகளும், மலைகளும் பாதிக்கப்படும் என்று மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
தொடரும் பணி
ஆனால், விவசாயிகள் மற்றும் மக்களின் கோரிக்கையை ஏற்காத அரசு, திட்டத்தை செயல்படுத்த முனைப்புடன் தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்த திட்டம் குறித்து எதிர்ப்புத் தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் மற்றும் வளர்மதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாலை அமைப்பதற்கான நில அளவீடு பணிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் ஆங்காங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இருப்பினும்ம் நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தடுத்த அதிகாரிகள்
தொடர்ந்து சேலம், தர்மபுரி மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பல கிராமங்களில் அதிகாரிகளிடம் பொதுமக்கள், நிலத்தை கையகப்படுத்த வேண்டாம் என்று கெஞ்சியும் அதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தர்மபுரி அருகே பாப்பம்பாடி பகுதியில் குமரேசன் என்பவரது வீட்டின் நடுவே சாலை அமைக்க வேண்டி அவரது வீட்டை அதிகாரிகள் அளந்தனர். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த குமரேசன் மற்றும் அவரது மனைவி வேடியம்மாள், மகன் சுஜித் ஆகியோர் மண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
மக்களிடம் பேச்சுவார்த்தை
ஆனால், போலீஸார் மண்ணெண்ணெய் கேன்களை அவர்களிடம் இருந்து பறித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதே போல பாப்பிரெட்டிபட்டியை அடுத்த இருளப்பட்டி கிராமத்தில் 3 குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தங்களது உடலில் மண்எண்ணெய் மற்றும் பெட்ரோலை கலந்து ஊற்றிக்கொண்டு தீக்குளிப்பதாக மிரட்டியதை அடுத்து அதிகாரிகள் அவர்களிடம் சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தினர்.
நிலம் கையகப்படுத்தும் பணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், கலசபாக்கம், சேத்துப்பட்டு, போளூர், செய்யாறு, வந்தவாசி ஆகிய தாலுகாவில், 122 கிமீ தூரத்துக்கு சாலை அமைகிறது. இதற்காக 74 கிராமங்களில் 7237 குடும்பத்தினரின் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் போராட்டம் வெடிக்கும்
இதுவரை சேலம், தர்மபுரியில் மட்டுமே போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், தற்போது திருவண்ணாமலை மாவட்டத்திலும் போராட்டம் பரவியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும், விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதை முன் கூட்டியே தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக, முன்னெச்சரிக்கையாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.