மெரினாவில் பைக் ரேஸ்... கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேர் கைது
சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பைக் ரேஸ் நடத்திய கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சட்டவிரோதமான முறையில், முக்கியச் சாலைகளில் அதி வேகமாக பைக்குகளை ஓட்டி ரேஸ் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே சென்னை மாநகர காவல்துறையினர் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலையில் இருந்து காந்தி சிலை வரை பைக் ரேஸ் நடத்த உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலிசார் நடத்திய சோதனையில் 5 பைக்கில் வந்த 10 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
வில்லிவாக்கம், கொளத்தூரைச் சேர்ந்த 10 பேரும் பைக் ரேஸ் நடத்த வந்ததாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை அண்ணா சதுக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேரையும் கைது செய்தனர். அவர்களது 5 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.