கதிராமங்கலத்தை தனிமைப்படுத்தும் போலீஸ்- மக்களை சந்திக்க முயற்சித்த 50 மதிமுகவினர் கைது
கதிராமங்கலத்தில் பொதுமக்களை சந்திக்க முயற்சித்த 50 மதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கும்பகோணம்: கதிராமங்கலம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் முற்றுகையிட்டு தனிமைப்படுத்தியுள்ளனர். அங்கு போராடும் பொதுமக்களை சந்திக்க சென்ற 50 மதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கதிராமங்கலத்தில் போராடும் பொதுமக்களை கொடூரமாக குண்டாந்தடிகளால் தாக்கி மண்டைகளை உடைத்தது போலீஸ். இதனால் தமிழகம் கொந்தளித்து போயுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் அரசியல் கட்சியினர், மக்கள் இயக்கங்களின் பிரதிநிதிகள் கதிராமங்கலம் நோக்கி படையெடுக்கின்றனர். ஆனால் கதிராமங்கலத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கதிராமங்கலத்தை முற்றுகையிட்டுள்ள போலீசார் எந்த ஒரு இயக்கத்தினரையும் பொதுமக்களை சந்திக்க அனுமதிக்கவில்லை. தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன் உள்ளிட்ட 40 பேர் கதிராமங்கலத்துக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் இன்றும் கதிராமங்கலத்துக்குள் மக்களை சந்திக்க மதிமுக நிர்வாகிகள் சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை அனுமதிக்க மறுத்தனர். இதனைத் தொடர்ந்து 50 மதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.