சென்னையில் ஐபிஎல்லுக்கு எதிராக போராட்டம்... நாம் தமிழர் கட்சியினர் 21 பேர் கைது!
சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் மைதானத்தில் காலணி வீசியர்வகள் உள்பட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். ஸ்டேடியத்தில் காலணி வீசியவர்கள் உள்பட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதி நேற்று போர்க்களமாக காட்சியளித்தது. திரும்பிய திசையெங்கும் ஐபிஎல்க்கு தடை கேட்டும் காவிரி மேலாண்மைவாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.
நாம் தமிழர் கட்சியினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதையடுத்து இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நாம் தமிர் கட்சியினர் 3 எஸ்ஐகளை தாக்கியதாகக் கூறி 10 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
மைதானத்திற்குள் கடுமையான சோதனைக்குப் பின்னரே ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். எனினும் நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் மைதானத்திற்குள் சென்று திடீரென காவிரிக்கான முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்த போதே நாம் தமிழர் கட்சியினர் மைதானத்திற்குள் காலணிகளை வீசியும், கொடியை தூக்கி எரிந்தும் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மைதானத்திற்குள் காலணி வீசிய 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.