பெண் மருத்துவரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டதால் நின்று போன திருமணம் – 5 பேர் மீது வழக்கு பதிவு
திருமங்கலம்: திருமங்கலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரின் திருமணம் வரதட்சணை காரணமாக நின்று போன சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் சியோன் நகரைச் சேர்ந்தவர் மும்மூர்த்தி. இவருடைய மகள் சகாய வள்ளி ஒரு ஹோமியோபதி டாக்டர். இவருக்கும், நாகர்கோவில் புது கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகனான பொறியாளர் பால சண்முகத்துக்கும் திருமணம் செய்து வைக்க பெரியோர்கள் முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் மணமகன் வீட்டார் பெண் வீட்டாரிடம் 60 பவுன் நகை வரதட்சணையாகக் கேட்டு அவர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர். திருமண ஏற்பாடுகளும் விமரிசையாக நடைபெற்று வந்தது.
இந்த சூழ்நிலையில்தான் கடந்த 9 நாட்களுக்கு முன்பு மணமகனின் உறவினர் ஒருவர் மணமகள் வீட்டாரை தொடர்பு கொண்டு கூடுதலாக 6 பவுன் நகை வேண்டும் என்றும், அதனை தராவிட்டால் திருமணத்தை நடத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணப்பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப்புகாரில், கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன் பாலசண்முகம், அவரது தந்தை சிவராமன், தாய் பகவதி அம்மாள், உறவினர்கள் முருகவேல், பொன் எழில் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இப்புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் மணமகன் வீட்டார் 5 பேரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 6 பவுன் நகைக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.