சென்னை கொட்டிவாக்கத்தில் வயதான தம்பதி வெட்டிக் கொலை - வடமாநில இளைஞர் கைது
சென்னை கொட்டிவாக்கத்தில் வயதான தம்பதி வெட்டிக் கொலை - வடமாநில இளைஞர் கைது
Recommended Video
சென்னை : சென்னை கொட்டிவாக்கத்தில் வசித்து வந்த வயதான தம்பதியினர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆலம் என்கிற வடமாநில இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொட்டிவாக்கம் ராமலிங்கபுரத்தில் வசித்து வருபவர் மாயாண்டி. இவரது மனைவி வள்ளிநாயகி. இவர்களது மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால் வீட்டில் இவர்கள் இருவர் மட்டுமே தனியாக வசித்து வந்தனர்.
நேற்று காலை வெகுநேரம் ஆகியும் இவர்கள் தங்கி இருந்த வீட்டின் கதவு திறக்காததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது அங்கு மாயாண்டி, வள்ளிநாயகி இருவரும் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர்.
இதனையடுத்து துரைப்பாக்கம் போலீஸுக்கு தகவல் தரப்பட்டதை அடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உடல்களை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கொலை நடந்த வீட்டிற்கு அருகே இருந்த சிசிடிவி பதிவுகளை போலீஸார் ஆராய்ந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில், அங்கு இளைஞர் ஒருவர் நடமாடியது தெரியவந்தது.
விசாரணையில் அவர் பெயர் ஆலம் என்பதும், வடமாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி என்பதும், சென்னையில் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தவர் என்றும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரை கைது செய்து விசாரித்ததில் அவர் இரண்டு கொலைகளையும் செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் வாக்குமூலத்தில், தான் மாயாண்டி வீட்டிற்கு டைல்ஸ் பதிக்கும் வேலை செய்தததாகவும், வேலை முடிந்தும் பேசிய பணத்தை தராமல் அலைக்கழித்ததால், மாயாண்டி மற்றும் வள்ளிநாயகி இருவரையும் அடித்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 13 சவரன் தங்க நகையை எடுத்துச் சென்றதாகவும் ஆலம் ஒப்புக்கொண்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.