எடப்பாடிக்கு காதுகேளாதோருக்கான கருவி அனுப்பும் போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது!
முதல்வர் எடப்பாடிக்கு காதுகேளாதோருக்கான கருவிகளை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : பேருந்து கட்டண உயர்வை எதிர்த்துப் போராடி வருபவர்களுக்குச் செவி சாய்க்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு காதுகேளாதோருக்கான கருவியை அனுப்ப முயன்ற மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 20ம் தேதி அரசுப் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. இந்த திடீர் கட்டண உயர்வால் தமிழகம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
குறிப்பாக இந்த கட்டண உயர்வு கல்லூரி மாணவர்களை பெரிதும் பாதித்து இருக்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் மீது பல இடங்களில் போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து உள்ளனர்.
இந்நிலையில், இன்று சென்னை அயனாவரத்தில் பேருந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வரும் மாணவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத தமிழக முதல்வருக்கு காதுகேளாதோருக்கான கருவியை தபாலில் அனுப்பும் போராட்டத்தை மாணவர்கள் நடத்தினர்.
அதில், தமிழக மாணவர்கள் பேருந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போரட்டங்களுக்கு செவி சாய்க்காததால், இந்த போராட்டத்தை கையில் எடுத்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.