பஸ்சில் மாணவிகளை கிண்டல் செய்த மாணவர்கள்- மடக்கி பிடித்த போலீசாரால் பரபரப்பு
நாகர்கோவில்: பஸ்சில் பயணம் செய்யும் மாணவர்கள், மாணவிளை கிண்டல் செய்து வந்ததை தொடர்ந்து அவர்களை போலீஸார் பஸ்சிலேயே தொடர்ந்து வந்து, மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கல்லூரிகள் வழியாக செல்லும் பஸ்களில் பயணம் செய்யும் மாணவர்கள் அந்த வழியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பஸ்சுக்கு காத்திருக்கும் மாணவிகளை கேலி செய்து, ஈவ் டீசிங்கில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. மேலும் பஸ்சின் இருக்கையில் அமராமல் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், பயணிகளுக்கு இடையூறாக கூச்சலிட்டபடி பயணம் செய்வதாகவும் புகார் கூறப்பட்டு வந்தது.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கும் புகார்கள் சென்றதை அடுத்து மாணவிகளை கேலி செய்யும் மாணவர்களை கையும், களவுமாக பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தலைமையிலான போலீசார் காலை மாறுவேடத்தில் அண்ணா பஸ்நிலையம் சென்று காத்திருந்தனர். அங்கிருந்து கல்லூரிகள் வழியாக செல்லும் ஒரு பஸ்சில் ஏறி பயணிகள் போல் பயணிகளோடு பயணிகளாக அவர்கள் அமர்ந்திருந்தனர்.
பஸ் கோட்டார் சந்திப்பு தாண்டி செட்டிக்குளம் செல்லும் வரையில் பஸ்சில் பயணம் செய்த மாணவர்கள் சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி பஸ் நிறுத்தங்களில் நின்ற பெண்களையும், மாணவிகளையும் ஆபாசமாக பேசி கேலி, கிண்டல் செய்ததை கண்டனர்.
பஸ் செட்டிக்குளம் சென்றதும், போலீசார் பஸ் டிரைவரிடம் சென்று தாங்கள் கோட்டார் போலீசார் என்று அறிமுகப்படுத்தி கொண்டு பஸ்சில் ரகளை செய்த மாணவர்களை பிடிக்க மாறுவேடத்தில் வந்திருப்பதாக கூறினர்.
பின்னர் பஸ்சில் இருந்தபடி கேலி, கிண்டலில் ஈடுபட்ட மாணவர்களை கீழே இறங்க விடாமல் செய்து கொண்ட அவர்கள் அப்படியே கோட்டார் போலீஸ் நிலையம் கொண்டு செல்லவும் உத்தரவிட்டனர்.
இதனை அடுத்து அந்த பஸ் செட்டிக்குளத்தில் இருந்து ராஜாக்கமங்கலம் பாதைக்கு திரும்பாமல் மீண்டும் செட்டிக்குளம் பி.டபிள்யூ.ரோடு வழியாக அண்ணா பஸ் நிலைய சாலையில் சென்று கோட்டார் போலீஸ் நிலையம் சென்றது.
அங்கு போனதும் பஸ்சில் இருந்த அனைத்து மாணவர்களையும் அப்படியே போலீஸ் நிலையம் அழைத்து சென்று அங்கு போலீசார் அந்த மாணவர்களின் விபரங்களை கேட்டு பதிவு செய்தனர்.
பின்னர் அவர்களிடம் மாணவ பருவத்தின் மாண்புகளை கெடுத்துவிட வேண்டாம் எனவும் அறிவுரை கூறினர். அதோடு இனிமேலும் இந்த மாணவர்கள் இப்படி பிரச்சினை செய்து மாட்டிக்கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இந்த சம்பவம் கல்லூரிகளுக்கு செல்ல பஸ் நிலையம் வந்த மாணவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.