வேலூரில் ரூ.1 கோடி மதிப்புள்ள ' கொக்கைன்' போதைபொருள் பறிமுதல் - 4 பேர் கைது
வேலூர்: வேலூர் காட்பாடியில் போதைப்பொருள் கடத்தலில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூபாய் 1 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
காட்பாடி பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து டி.எஸ்.பி. கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் கவுரி, சிவக்குமார் மற்றும் போலீசார் காட்பாடி பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது காட்பாடி சில்க்மில் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த லாட்ஜை போலீசார் சுற்றி வளைத்தனர்.
லாட்ஸ் அறையில் போதைப் பொருட்களுடன் இருந்த அணைக்கட்டு பகுதியை சேர்ந்த ஜாகீர் உசேன், மயிலாடுதுறை கொரநாடு பகுதியை சேர்ந்த காமித், சத்துவாச்சாரியை சேர்ந்த நிர்மல், சத்துவாச்சாரி வள்ளலாரை சேர்ந்த தினகரன் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 950 கிராம் கொக்கைன் வகை போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 1 கோடி ஆகும். கைதான 4 பேரும் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் லாட்ஜ் முன்பு நின்றது. அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த போதைப் பொருட்களை யாரிடமோ விற்பனை செய்வதற்காகத்தான் இவர்கள் 4 பேரும் இங்கு வந்துள்ளனர். எனவே இவர்களிடம் இருந்து போதைப் பொருட்களை வாங்க இருந்தது. யார்? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.