சேலத்தில் 720 பவுன் நகை கொள்ளையில் திருப்பம்.. அக்கா வீட்டிலேயே கை வைத்த தம்பி!
சேலத்தில் இரும்பு வியாபாரியின் வீட்டில் நடந்த கொள்ளையில் தம்பியே ஆட்களை ஏவிவிட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
சேலம்: சேலம் கிச்சிப்பாளையம் இரும்பு வியாபாரியின் வீட்டில் நடந்த 720 பவுன் நகை கொள்ளையில் தம்பியே ஆட்களை ஏவி கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது.
கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் அத்தியப்பன். இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி விஜயலட்சுமி கணவரின் இரும்பு வியாபாரத்தை கவனித்து வருகிறார். இவரும் இவரது தம்பி பாஸ்கரனும் நேற்று திருப்பதி சென்றனர்.
கோயிலுக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்த விஜயலட்சுமி ஜன்னல் கதவுகள் உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தார்.
பீரோ திறப்பு
வீட்டு அறையில் இருந்த பீரோவை சாவி மூலம் திறந்த கொள்ளையர்கள் அதிலிருந்த 720 பவுன் நகைகளையும், ரூ.2 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
மிரட்டல் கடிதம்
மேலும், கொள்ளை சம்பவம் குறித்து போலீஸுக்கு தெரிவித்தால் தாங்கள் வைத்த பில்லி சூனியத்தால் உயிர் பலி நிகழ நேரிடும் என்று மிரட்டல் கடிதம் வைத்து விட்டு சென்றனர். இதுகுறித்து விஜயலட்சுமி சேலம் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.
கைரேகை நிபுணர்கள்
சம்பவ இடம் விரைந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பின்னர் இதுதொடர்பாக போலீஸார் வீட்டு பணியாளர்கள், அக்கம் பக்கத்தினர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி விஜயலட்சுமிக்கு வேண்டப்பட்டவர்கள்தான் இவ்வாறு செய்துள்ளனர் என்று சந்தேகித்தனர்.
திடுக் திருப்பம்
விசாரணையில் விஜயலட்சுமியின் வீட்டு மாடியில் வசிக்கும் அவரது தம்பி பாஸ்கரன் மீது போலீஸாரின் சந்தேக பார்வை திரும்பியது. இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளை அடிக்க கூலியாட்களை அவரே ஏவிவிட்டது அம்பலமானது.
திருப்பதி பயணம்
அக்கா விஜயலட்சுமியுடன் திருப்பதி செல்வதற்கு முன்னர் தங்கள் பயணம் குறித்து கூலிப்படையினரிடம் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து குளியலறை கண்ணாடி ஜன்னல்களை அகற்றி வைத்துவிட்டு சென்றுள்ளார். தடயவியல் நிபுணர் சோதனையில் ஜன்னல் கண்ணாடியில் பாஸ்கரனின் கைரேகை இருந்தது. அந்த வழியை பயன்படுத்திய கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.