சீமானை கைது செய்வதை எதிர்த்து போராட்டத்தில் குதித்த தொண்டர்கள்.. பல்லாவரத்தில் பரபரப்பு
பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டியதற்காக நாம் தமிழர், மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
சென்னை : பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டியது தொடர்பாக கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள நாம் தமிழர், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தொண்டர்களை போலீஸார் தடியடி நடத்தி கைது செய்து வருகின்றனர்.
காவிரி மேலாண்மை விவகாரத்தில் தொடர்ந்து தாமதப்படுத்தி வரும் மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக இன்று ராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.
இதில் சென்னை விமான நிலையம் முன்பு போராட்டம் நடத்திய சீமான், தமிமுன் அன்சாரி, இயக்குநர்கள் பாரதி ராஜா, அமீர், கவுதமன் போன்றோர் கைது செய்யப்பட்டு, பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை விடுவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மட்டும் போலீஸார் விடுவிக்க மறுத்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தின் போது, காவலர்களைத் தாக்கியதாக சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், அவரை போலீஸார் கைது செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சீமான் மற்றும் தமிமுன் அன்சாரியை விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றி வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாவரம் ஸ்டேஷன் சாலையே பரபரப்பாக போர்க்களம் போல காணப்படுகிறது. சாலையோர வியாபாரிகள் கடைகளை எடுத்து விட்டனர். சீமானை விடுவிக்கக் கோரி பாரதிராஜாவும் வெளியேற மறுத்து வருவதால் பதட்டம் தொடர்கிறது.