ராம்குமாரிடம் விடிய விடிய விசாரணை... சுவாதியை கொலை செய்ததை நடித்து காட்டுகிறார்?
சென்னை: பொறியாளர் சுவாதி கொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ராம்குமாரிடம் போலீசார் நேற்று இரவு முதல் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பொறியாளர் சுவாதி கடந்த மாதம் 24-ந்தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் கடந்த 1-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமாரை அடையாளம் காட்டுவதற்கான அணிவகுப்பும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ராம்குமாரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு மீதான விசாரணைக்காக ராம்குமார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ராம்குமாரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து ராம்குமாரை ரகசிய இடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா? என்பதும் குறித்தும் போலீசார் விசாரித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு ராம்குமார் அழைத்துச் சென்றனர். அங்கு சுவாதி நண்பர் பிலால் சித்திக் என்பவரையும் வரவழைத்துள்ளனர் போலீசார். ராம்குமார் முன்னிலையில் பிலாலிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. விரைவில் ராம்குமாரை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அழைத்து சென்று, கொலை செய்தது எப்படி என்பதை நடித்து காட்ட சொல்லி ஆதாரம் திரட்டவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.