நிலைமை கைமீறிவிட்டது... எங்கள் கட்டுப்பாட்டில் யாரும் இல்லை... கைவிரித்த இஸ்லாமிய கூட்டமைப்பு
Recommended Video
சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கும் சூழலில் இது போன்று போராட்டம் நடப்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அரசு மீது சட்டமன்றத்தில் வழக்கமாகவே திமுக எகிறும், இதில் தடியடி விவகாரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு அரசை உலுப்பி எடுத்து விடும் என்பதால் போராட்டத்தை நேற்றிரவோடு முடிவுக்கு கொண்டு வர சென்னை மாநகர காவல்துறை தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகளை நேரிலும், அலைபேசி மூலமும் அழைத்துப் பேசிய மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி பேசியுள்ளார். ஆனால் தற்போதைய சூழலில் எந்த தலைவரின் கட்டுப்பாட்டிலும் போராட்டங்கள் நடக்கவில்லை என்றும், வெள்ளிக்கிழமை இரவு போலீசார் நடந்துகொண்ட விதத்தால் தான் நிலைமை இவ்வளவு தூரம் சென்றதாகவும் இஸ்லாமிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை வடக்கு காவல் ஆணையர் கபில் சரத்கரும், போராட்டத்தின் போது பணியில் இருந்த விஜயகுமாரி ஐ.பி.எஸ்.சும் வெள்ளிக்கிழமை இரவு தடியடி நடத்துவதற்கு முன்பு இதுபோன்று அழைத்துப்பேசி சுமூக தீர்வு காண முயற்சித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். தன்னெழுச்சியாக போராட்டம் நடைபெற்று வரும் சூழலில் தங்கள் பேச்சை யாரும் கேட்கமாட்டார்கள் எனக்கூறி கைவிரித்துள்ளனர். தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்பதை அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் இது தொடர்பாக மேலிடத்துக்கு எடுத்துக்கூறியுள்ளனர்.
சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாக வெள்ளிக்கிழமை ஒரு நாளோடு முடியவிருந்த போராட்டத்தை, தடியடி பிரயோகம் செய்து தமிழகம் முழுவதும் பதற்றத்தை பற்ற வைத்த போலீஸ் அதிகாரிகள் மீது முதல்வர் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.