ஆதித் தமிழர்பேரவை நிறுவனருக்குத் தடை!
நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் படுகொலை செய்யப்பட்ட ஆதித் தமிழர் பேரவை ஒன்றியத் தலைவர் மகாராஜன் வீட்டுக்குச் செல்லக் கூடாது என்று அமைப்பின் நிறுவனரான அதியமானுக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.
வள்ளியூரில், ஆதித் தமிழர் பேரவை வள்ளியூர் ஒன்றியத்தலைவர் சாமி என்பவர் மகன் மாணவர் அணி பொறுப்பாளர் மகாராஜன். வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சாமிக்கு ஆறுதல் தெரிவிக்க ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் செல்கிறார் என்று போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அதியமான் தங்கியிருந்த ஹோட்டல் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
மேலும், அதியமான் ஹோட்டலை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு அவரை ஹோட்டல் அறையிலேயே போலீஸார் தடுத்து வைத்தனர். இருப்பினும் தடையை மீறி ஆதித் தமிழர் பேரவையினர் அப்பகுதிக்கு செல்லப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.