வாக்காளர் பேரணி நடத்த போலீஸ் தடை.. தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைது
போலீசார் தடை விதித்ததால் மாநிலம் முழுவதும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் நடத்த இருந்த வாக்காளர் பேரணி நடைபெறவில்லை.
சென்னை: மக்கள் ஆதரவை பெறும் வகையில் இன்று முதல் ஒவ்வொரு தொகுதியிலும் நீதி கேட்பு பேரணி நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். ஆனால் போலீசார் தடைவிதித்ததால் பேரணி நடைபெறவில்லை. மதுரையில் பேரணி நடத்த முயன்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று இரவு சென்று மரியாதை செலுத்தினார். நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக எம்எல்ஏக்கள் நியாயமான முடிவுகளை எடுக்க வலியுறுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சார்ந்திருக்கும் தொகுதிகளில் பேரணி, ஊர்வலம் நடைபெறும் என்று கூறினார்.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்காளர் பேரணி நடத்த முயன்றனர். ஓபிஎஸ் ஆதரவாளரான மதுரை மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் சாலைமுத்து, உள்ளிட்ட ஏராளமானோர் இன்று வாக்காளர் பேரணி நடத்து முயன்றனர். அபோது அங்கு வந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல் கைது செய்தனர்.
மேலும் மாநிலம் முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நடத்த இருந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து மாநில முழுவதும் இன்று நடைபெற இருந்த வாக்காளர் பேரணி நடைபெறவில்லை. தமிழகம் முழுக்க ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு காவல்துறை மூலமும், தனிப்பட்ட முறையிலும் நெருக்கடி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.