தினகரன் பதவியேற்பு... குவிக்கப்படும் போலீசார்- தலைமை செயலகத்தில் பரபரப்பு
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக தினகரன் இன்று பதவியேற்கவுள்ள நிலையில் தலைமை செயலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: மதியம் 1.30மணியளவில் தினகரன் பதவியேற்கவுள்ள நிலையில், தலைமை செயலகத்தில் நூறுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
தினகரன் என்ற ஒற்றை வார்த்தை தற்போது தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. கட்சியை விட்டு நீக்கம், ஐடி ரைடு, சிறை தண்டனை, தொடர் துரோகங்கள், ஓட்டுக்கு பணம், தேர்தல் ரத்து, மீண்டும் போட்டி, அமோக வெற்றி என்று கடந்த சில மாதங்களாக தினகரன் காண ஏற்ற இறக்கங்கள் இல்லை.
திக-விலிருந்து வெளியேறிய அண்ணா, காங்கிரஸ் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிய கருணாநிதி, கருணாநிதியை எதிர்த்து அதிமுகவை ஆரம்பித்த எம்ஜிஆர், ஜாவா..? ஜெவா...? என்ற போட்டியில் வென்ற ஜெயலலிதா, திமுகவை விட்டு வெளியேறிய மதிமுக, அனைவரையும் வருத்தெடுத்த தேமுதிக விஜயகாந்த் என்று அந்தந்த காலக்கட்டத்தில் அதிரடி அரசியலுக்கு எப்போதும் அமோக ஆதரவு அளிப்பது தான் தமிழக மக்கள் ஸ்டைல்.
அந்த வரிசையில் தற்போது எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் தினகரனின் பக்கம் மக்களின் கவனம் திரும்பியுள்ளதையே ஆர்.கே.நகர் முடிவு தெரிவிக்கின்றன. பண பலத்தால் அவர் வெற்றிப்பெற்றார் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், மக்களின் ஆதரவு அவருக்கு இல்லை என்று ஒரேடியாக ஒதுக்கி விட முடியாது.
இன்று பிற்பகல் 1.30மணியளவில் தலைமை செயலகத்தில் தினகரன் பதவியேற்கவுள்ளதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். பதவியேற்பிற்காக வரும் தினகரனுடன் அவரின் ஆதரவாளர்கள் கூட்டம் தலைமை செயலகத்திற்கு நுழைந்து கலாட்டா எதுவும் செய்து விடக்கூடாது என்பதற்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
பேனர் கலாச்சாரத்தை பெரிதும் மதிக்கும் அதிமுகவில் உள்ள தினகரன் ஆதரவாளர்கள், தலைமைச்செயலகம் செல்லும் வழிநெடுக்கிலும் அவரின் பேனர்களை வைத்து தங்களின் மகிழ்ச்சியையும், ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.