பாலியல் தொல்லை புகார்- நெல்லை திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் கைதாகிறார்
நெல்லை: திமுக பிரமுகரின் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மீது கொலை மிரட்டல், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து கருப்பசாமி பாண்டியன் கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பு நெல்லையில் நிலவுகிறது.
நேற்று சரக டிஐஜியை நேரில் சந்தித்து இதுதொடர்பாக தமிழரசி என்ற பெண் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டவுன் தமிழரசி
நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி. இவர் நேற்று நெல்லை சரக டிஐஜி சுமித் சரண் அலுவலகத்திற்குச் சென்று கருப்பசாமி பாண்டியன் மீது பாலியல் புகார்களைக் கூறி மனு ஒன்றைக் கொடுத்தார்.
கட்சிப் பணியாற்ற விருப்பம்
அதில்,3 வாரங்களுக்கு முன்பு நானும் எனது தந்தையும் நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியனை சந்தித்தோம். கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். நீங்கள்தான் உயர்ந்த இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றேன். அவர் சரி என்றார்.
குற்றாலத்தில் அநாகரீகம்
இரு வாரத்திற்கு முன்பு குற்றாலத்திலுள்ள ஒரு கெஸ்ட் அவுசில் வந்து தன்னை சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார். நானும், எனது தந்தையும் அங்கு சென்றோம். எங்களிடம் சிறிது நேரம் அவர் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் எனது தந்தையை அடுத்த அறையில் இருக்குமாறு கூறினார்.அவரது அறையில் தனியாக இருந்த என்னிடம் தனது ஆசைகளை நிறைவேற்றினால் கட்சியில் பொறுப்பு அளித்து பெரிய இடத்திற்கு கொண்டு வருவதாக கூறினார்.
திட்டினேன் - மிரட்டினார்
நான் மறுத்து அவரை திட்டினேன். இதை யாரிடமாவது கூறினால் நடப்பதே வேறு என்று மிரட்டினார். நானும் தந்தையும் வெளியே வந்து விட்டோம். இது தொடர்பாக அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் தமிழரசி.
3 பிரிவுகளில் வழக்குப் பதிவு
இதையடுத்து மாவட்ட எஸ்.பிக்கு டிஐஜி விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணைக்குப் பின்னர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக பேசுவது, பெண்ணை இழிவுபடுத்தி பேசுவது, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்படலாம்
வழக்குப் பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து கருப்பசாமி பாண்டியன் கைது செய்யப்படக் கூடும் என்ற பரபரப்பு நெல்லையில் நிலவுகிறது.