மன்னார்குடியில் அதிமுக அலுவலகத்திற்கு தீ வைப்பு- 2 பேர் மீது வழக்கு- போலீஸ் குவிப்பு
மன்னார்குடியில் அதிமுக அலுவலகத்தில் தீ வைக்கப்பட்ட விவகாரத்தில் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மன்னார்குடியில் அதிமுக அலுவலகத்தில் தீ வைக்கப்பட்ட விவகாரத்தில் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் எஸ்.காமராஜ் மற்றும் ஆனந்தராஜ் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பதற்றம் காரணமாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக அலுவலகத்திற்கு மர்ம நபர் தீ வைத்தனர். அந்த அலுவலகத்தின் எதிரே உள்ள இந்தியன் வங்கி சிசிடிவி காமிராவை மறைத்து தீ வைப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் அலுவலகத்தின் முன் பகுதியில் போடப்பட்டிருந்த கூரை முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இதுதொடர்பாக மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீ வைத்த மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். மேலும் இந்தியன் வங்கி அதிகாரிகள் சிசிடிவி காமிராவை தந்த பிறகு தான் அதனை ஆய்வுக்கு உட்படுத்தி மர்ம நபர் குறித்து விவரங்கள் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே அதிமுக அலுவலகத்தில் தீ வைக்கப்பட்ட விவகாரத்தில் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் எஸ்.காமராஜ் மற்றும் ஆனந்தராஜ் மீது சத்தியமூர்த்தி என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடைய மன்னார்குடி அதிமுக அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. தீவைப்பு சம்பவத்தினால் தினகரன், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்படும் என்ற பதற்றம் உருவாகியுள்ளது.