போராட்டத்தில் வாகனம், கண்ணாடியை உடைத்த போலீஸ்.. பொதுமக்கள் மீது பழி போட்ட சதி அம்பலம்
மதுவிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பொது சொத்திற்கு சேதம் விளைவித்ததாகக் கூறி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் வாகனத்தின் ஜன்னல் கண்ணாடியை போலீசாரே உடைத்துள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ள
திருப்பூர்: திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் செவ்வாய் கிழமை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் தொடர்ந்து 7 மணி நேரம் போராட்டத்தை நடத்தினார்கள்.
இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு எதிர்ப்பினை தெரிவித்தனர். போராட்டத்தை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் தடியடியில் ஈடுபட்டனர்.
அதில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்த வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மண்டை உடைப்பு
மேலும், போலீஸ் தடியடியில் இளைஞர் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தை வன்முறை களமாக மாற்றிய போலீஸ் அதிகாரிக்கு எதிர்ப்பும் கண்டனமும் வலுத்தது.
27 பேர் மீது வழக்கு
இந்நிலையில், போராட்டக்காரர்கள் பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்தாகவும், போலீசாரின் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்ததாகவும் போராடியவர்கள் மீது போலீசார் பழிபோட்டனர். 25 பேரை போலீசார் கைது செய்து 15 பிரிவுகளின் கீழ் வழக்கும் தொடர்ந்தனர்.
வீடியோ காட்சி
இந்தப் போராட்டத்தின் போது பல்வேறு செய்தி சேனல்கள் விடியோ எடுத்தனர். பொதுமக்களும் தங்களது செல்போன்களில் பதிவு செய்துள்ளனர். அப்போது போலீசாரே காவல்துறை கண்ணாடியை உடைத்து சேதம் செய்ததையும் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
போலீசாரே கண்ணாடி உடைப்பு
போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவில் போலீஸ் அதிகாரி ஒருவரின் கையில் ரத்தம் சொட்ட சொட்ட ஓடி வருகிறார். அவரிடம் மற்றொரு போலீஸ் "ஏட்டய்யா என்ன ஆச்சி" என்று கேட்கிறார். அதற்கு அந்த போலீஸ் அதிகாரி "கண்ணாடியை உடைத்தேன் அதுதான்" என்று பதில் சொல்கிறார்.
சதி அம்பலம்
இப்படி போலீசே காவல்துறை வாகனத்தின் கண்ணாடியை உடைத்துவிட்டு மதுக்கடை வேண்டாம் என்று போராடிய பொதுமக்கள் மீது பழி போட்டு வழக்கு பதிவு செய்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.