காஞ்சிபுரம் "டான்" ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் மீது வழக்குப்பதிவு
காஞ்சிபுரம்: துபாயில் தலைமறைவாகவுள்ள பிரபல தாதா காஞ்சிபுரம் ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இன்டர்போல் போலீஸாரே தேடி வரும் தாதா ஸ்ரீதர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். ரூ. 150 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்துள்ளவர். அத்தனையையும் தற்போது அமலாக்கப் பிரிவு முடக்கி வைத்துள்ளது.
சாராய வியாபாரி சக்கவர்த்தியிடம் அடியாளாக சேர்ந்து பின்னர் அவரது மகளையே திருமணம் செய்து கொண்டு தனிப் பெரும் கள்ளச்சாராய வியாபாரியாக உருவெடுத்தவர் ஸ்ரீதர். ரியல் எஸ்டேட், செம்மரக் கடத்தல் என பல தொழில்களில் ஈடுபட்டவர். உள்ளூரில் பிரச்சினைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து துபாய்க்குத் தப்பி ஓடி விட்டார். இப்போது வரை அங்குதான் இருக்கிறார். அவரைக் கைது செய்து கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை பலன் தரவில்லை.
இந்நிலையில், வெளிநாட்டில் படித்துவந்த அவரது மகன் சந்தோஷ்குமார், தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சென்னை வந்தார். தகவல் அறிந்த காஞ்சிபுரம் சிவகாஞ்சி போலீசார், சந்தோஷ்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் மாவட்ட எஸ்.பி., சந்தோஷ் ஹதிமனி விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் விசாரணைக்காக சந்தோஷ் மீண்டும் ஆஜராக வேண்டும் என எல்லப்பன் நகரில் உள்ள ஸ்ரீதரின் வீட்டில் போலீசார் நேற்று நோட்டீஸ் ஒட்டினர். ஆனால் சந்தோஷ்குமார் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகததால் சந்தோஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்ய காஞ்சிபுரம் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில் சிவகாஞ்சி போலீசார் ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஸ்ரீதரின் மனைவி குமாரியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.