நடிகை ராதாவுக்கு கொலை மிரட்டல்.. ரவுடி வைரம் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு
சென்னை: சுந்தரா டிராவல்ஸ் திரைப்பட நடிகை ராதாவுக்கு, கொலை மிரட்டல் விடுத்ததாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வைரம், முன்னாள் காதலன் பைசூல், அதிமுக பிரமுகரான முனிவேல் என்பவரின் மனைவி உமாதேவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடிகை ராதா. இவர் கடந்த திங்கள்கிழமை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அந்த மனுவில், ஏழு ஆண்டுகளுக்கு முன், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த, பைசூல் என்ற தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டது. தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பலமுறை உடல்ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டதாகவும், இருவரும் கணவன், மனைவி போல ஒரே வீட்டில் கடந்த 6 ஆண்டுகள் வாழ்ந்து வந்தோம். என்னை திருமணம் செய்ய மறுத்ததுடன், 50 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்தார். இது பற்றி, 2013ல், போலீசில் புகார் அளித்தேன். போலீசார், பைசூலை கைது செய்தனர்.
இந்நிலையில், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., பிரமுகர் முனிவேல் என்பவருடன் நட்பாக பழகி வந்தேன். அது, பைசலுக்கு பிடிக்கவில்லை. நடவடிக்கை என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக, முனிவேலின் மனைவி உமாதேவியை துாண்டிவிட்டு, என் மீது போலீசில் புகார் அளிக்க வைத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, மொபைல் போன் மூலம், புழல் சிறையில் இருந்து ரவுடி வைரம் பேசுவதாக ஒருவர் கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பைசல், உமாதேவி மற்றும் ரவுடி வைரம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகார் மீது, விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, ரவுடி வைரம், நடிகை ராதாவின் முன்னாள் காதலன் பைசல், அ.தி.மு.க., பிரமுகர் முனிவேலின் மனைவி உமாதேவி ஆகியோர் மீது, கொலை மிரட்டல் மற்றும் ஆபாசமாக பேசுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகை ராதாவின் குற்றச்சாட்டு குறித்து, ரவுடி வைரத்திடம் போலீசார் விசாரித்தில், 'நான் மிரட்டல் விடுக்கவில்லை' என, கூறியிருந்தான். இதுதொடர்பாக அவரது மனைவியும் மறுப்பு தெரிவித்து புகார் அளித்து இருந்தார். ஆனால், சிறையில் இருந்து ரவுடி ஒருவன் மொபைல் மூலம் பேசியதாக, நடிகை ராதா, 'ஆடியோ' வெளியிட்டு இருப்பதால், ரவுடி வைரத்தின் குரல் பதிவையும், அந்த ஆடியோவையும் போலீசார் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.