நெல்லை: தபால் ஓட்டு பதிவு செய்த காவலர்கள்- ஆசிரியர்களை இழுத்தடிக்கும் அதிகாரிகள்
திருநெல்வேலி: தேர்தல் பணிக்காக செல்லும் போலீசார் நெல்லை மாவட்டத்தில் 10 மையங்களில் தங்களின் தபால் ஓட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆசிரியர்கள் பலருக்கு அதிகாரிகள், தபால் ஓட்டுகளை வழங்காமல் வேண்டும் என்றே இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது இதைக்கண்டித்து வருகிற 12ம் தேதி நடக்கும் பயிற்சி வகுப்பை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் 16 ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பணிக்காக 14 ஆயிரத்து 643 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலான ஊழியர்களுக்கு தபால் ஓட்டு கிடைக்கவில்லை. இதனால் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
முதல் கட்டமாக பயிற்சியில் பங்கேற்ற தேர்தல் பணி அலுவலர்களுக்கு வி்ண்ணப்பம் வழங்கப்பட்டு 2வது கட்ட பயிற்சியின் போது அவர்கள் தபால் ஓட்டு போட்டனர். இது போல் காவல் துறையினர் தபால் ஓட்டு போட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக அவர்களுக்கு தபால் ஓட்டுக்கான படிவங்கள் வழங்கப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் உள்ள காவல் துறையினர் வாக்களிக்க தனி மையம் அமைக்கப்பட்டிருந்தது.
பாளை ஜான்ஸ் பள்ளி வாக்கு பதிவு மையத்தில் தபால் ஓட்டு போட நீ்ண்ட வரிசையில் போலீசார் காத்திருந்தனர். அவர்களுக்கு படிவம் வழங்கப்பட்டு அவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
தபால் மூலம் அனுப்பப்படும் ஓட்டுகளை வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளுக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் நேற்று பிற்பகல் போலீசாருக்கான தபால் ஓட்டு பதிவு நடந்தது. இத்தொகுதியில் அரசு ஊழியர்கள், போலீசார் என 1, 426 தபால் ஓட்டுகள் உள்ளன. 300 போலீசார் ஓட்டு , 100 ஊர்காவல்படையினர் ஓட்டுகள் உள்ளன.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு என அடுத்தடுத்து பணிகள் இருக்கும் என்பதால், நேற்று 1 மணியில் இருந்து மாலை 6 வரை போலீசார் ஓட்டு அளிக்க அறிவுறுத்தப்பட்டனர். ராஜபாளையம் தொகுதி போலீசார் தபால் ஓட்டுக்கள் 150 நேற்று பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு செல்லும் பலருக்கு அதிகாரிகள், தபால் ஓட்டுகளை வழங்காமல் வேண்டும் என்றே இழுத்தடிப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பயிற்சிக்குரிய ஆணையும், தபால் ஓட்டுக்குரிய படிவங்களும் வழங்கப்பட்டன. அனைத்து ஆசிரியர்களும் கடந்த ஏப்ரல்24ம் தேதி தபால் ஓட்டுக்குரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடந்த மே 7ம் தேதி நடந்த 2ம் கட்ட பயிற்சி வகுப்பில் ஒரு சில ஆசிரியர்களுக்கு மட்டுமே தபால் ஓட்டு போட வாக்கு சீட்டுகள் வழங்கப்பட்டன. மீதம் உள்ள ஆசிரியர்களுக்கு அடுத்த பயிற்சி வகுப்பின் போது வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் பணிபுரியும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இதுவரை வாக்குச்சீட்டுகள் வழங்கப்படவில்லை. தபால் ஓட்டுகளை வழங்காமல் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இழுத்தடிப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
12ம் தேதி நடக்கும் பயிற்சியின் போது அனைத்து ஆசிரியர்களுக்கும் தபால் ஓட்டுகள் வழங்கி வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி வகுப்பை புறக்கணிக்கப்பபோவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அதிமுக அரசின் மீது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். எனவே அவர்களுக்கு தபால் ஓட்டு வாய்ப்பை அதிகாரிகள் இழுத்தடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.