புது சூட்கேசுடன் ஆட்டோவில் பறந்த அரசு ஊழியர் - மடக்கி பிடித்த போலீசார்
நெல்லை: நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே புத்தம் புது சூட்கேசுடன் வந்த அரசு ஊழியர் ஓருவர் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் துரத்தி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. நெல்லை வேட்பாளர்களுக்காக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் அந்த வழியாக ஆட்டோ ஓன்றில் புத்தம் புதிய சூட்கேசுடன் ஒருவர் வேகமாக வந்தார். இதனை பார்த்த போலீசார் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டு செல்லப்படுகிறதோ என்ற சந்தேகத்தின் பேரில் ஆட்டோவை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அவரை பிடித்து கொண்டு போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் இன்றுடன் ஓய்வ பெறுவதாகவும், எல்லோரும் சேர்ந்து அவருக்கு பரிசளிப்பதற்காக சூட்கேஸ்கள் வாங்கி செல்வதாக தெரிவித்தார். இதனை நம்பாத போலீசார் புதிய சூட்கேசை திறந்து பார்த்து எல்லா இடங்களிலும் சோதனை போட்டனர். ஆனால் ஒன்றும் சிக்கவில்லை. இதனை தொடர்ந்து அவரை ஆட்டோவுடன் விடுவித்தனர். இந்த சோதனையால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.