போலீசாருக்கே சாபம் விடுவதாக மிரட்டிய நித்யானந்தா பெண் சீடர்கள்! அடித்து விரட்டப்பட்டதால் பரபரப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு செய்து குடிசையமைத்த நித்யானந்தா சீடர்களை விரட்டியடித்தனர்போலீசார். சாபம் விட்டுவிடுவோம் என பெண் சீடர்கள் மிரட்டியதை போலீசார் கண்டுகொள்ளவில்லை.
திருவண்ணாமலையின் பவழக்குன்று பகுதியில் நித்யானந்தாவின் ஆண், பெண் சீடர்கள் ஆக்கிரமிப்பு செய்து குடிசை போட்டு, நித்யானந்தா சிலைகளை நிறுவி பூஜை செய்து வந்தனர்.
அனுமதியில்லாமல் இப்படி செய்ய கூடாது என வருவாய் துறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை. எனவே போலீசார் துணையோடு குடிசையை காலி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இழுத்துச் சென்ற போலீசார்
ஆனால் குடிசையை அகற்றும்போது, அதன் கால்களை பிடித்துக்கொண்டு நித்யானந்தா சீடர்கள் வம்பு செய்தனர். அவர்களை தரதரவென போலீசார் இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர்.
தொட்டுப்பாருங்க
பெண் சீடர்களோ நித்யானந்தா சிலை முன்பு உட்கார்ந்து கொண்டு, தங்களை அகற்றினால் சாபம்விடுவோம் என மிரட்டினர். "உங்களுக்குத்தான் நம்பிக்கையில்லைல.. அப்போ எங்கள தொட்டுப் பாருங்க.." என நித்யானந்தா பெண் சீடர்கள் தங்களுக்கே உரிய நக்கல் பாணியில் பதிலளித்தனர். ஆனால் அஞ்சவில்லை போலீசார்.
ஆப்பிள் போனில் சூட்டிங்
பெண் போலீசார் அந்த பெண் சீடர்களை அப்புறப்படுத்திவிட்டு குடிசையை அகற்றி ஆக்கிரமிப்புகளை சரி செய்தனர். ஆனால் அதையும் பெண் சீடர்கள் போனில் படம் பிடித்தனர். அதில் ஒரு பெண் சீீடர் ஆப்பிள் போனில் படம் பிடித்தது அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.
வழக்கமாக்கிவிட்டார்
நித்யானந்தா போகுமிடமெல்லாம் நிலங்களை ஆக்கிரமிப்பது வழக்கம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. போலீசார் நடவடிக்கையால் திருவண்ணாமலை பவழக்குன்று பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.