செப்டம்பருக்குள் சென்னை சிசிடிவி வளையத்துக்குள் வருகிறது.. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்
சென்னை மாநகரம் செப்டம்பருக்குள் சிசிடிவி வளையத்துக்குள் வரும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் விவேக் நடித்த மூன்றாம் கண் என்ற குறும்படத்தை வெளியிட்டு பேசிய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் சென்னை மாநகரம் சிசிடிவி கேமிரா கண்காணிப்பு வளைத்துக்குள் வரும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொடர்ந்து பல இடங்களில் வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் அச்சதிலேயே இருந்து வருகின்றன. இப்படியான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதில் தொழில்நுட்ப வளர்ச்சி உதவி வருகிறது. பல குற்றவழக்குகளில் சிசிடிவி கேமிரா வீடியோதான் முக்கிய ஆதாரமாகவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும் உதவியாக உள்ளன. இதனால், பாதுகாப்பு கருதி பலரும் தங்களுடைய கடைகள், வீடுகளில் சிசிடிவி கேமிராவைப் பொருத்திவருகின்றன.
இந்நிலையில், சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான அவசியம் குறித்து நடிகர் விவேக் தயாரித்து நடித்த மூன்றாம் கண் என்ற விழிப்புணர்வு குறும்படம் மற்றும் இ-செலான் குறித்த 2 குறும்படங்களை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று சென்னையில் வெளியிட்டார். அதனை நடிகர் விவேக் பெற்றுக் கொண்டார்.
அதே போல, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது தொடர்பாக அபராதம் செலுத்தும் இ-செலான் குறித்த குறுந்தகடுகளை இந்தியாவின் முதல் பெண் மோட்டார் பைக் பந்தய வீரர் அலிஷா அப்துல்லா பெற்றுக் கொண்டார்.
மூன்றாம் கண் குறும்படத்தை வெளியிட்டுப் பேசிய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், "பொதுமக்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமிரா நிறுவும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையில் பொது இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை மாநகரம் முழுவதும் வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் சிசிடிவி கேமிரா வளையத்துக்குள் கொண்டுவரப்படும். நடிகர் விவேக் பாணியில் நகைச்சுவையோடு சமூக சிந்தனையை தூண்டும் வகையில் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார்" என்று கூறினார்.
நிகழ்ச்சியில் நடிகர் விவேக் பேசுகையில்," இ-செலான் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு காவல் துறை உங்கள் நண்பன் என்று கூறுவதற்கு ஏற்ப பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றங்களை தடுக்க அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராவை பொருத்த வேண்டும்" என்று கூறினார்.