ரூ. 754 கோடி மதிப்பில் சீருடைப் பணியாளர்களுக்கான ‘‘உங்கள் சொந்த இல்லம்’’... ஜெ. திறந்து வைத்தார்!
சென்னை:போலீசாருக்கான ‘‘உங்கள் சொந்த இல்லம்'' திட்டத்தின் கீழ், 754 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சீருடைப்பணியாளர்களுகான வீடுகள் மற்றும் காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
உங்கள் சொந்த இல்லம்
மக்கள் நலன் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களின் நலன் காப்பதற்காக, காவலர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு சொந்த வீடு கிடைத்திடும் வகையில், ‘‘உங்கள் சொந்த இல்லம்'' திட்டத்தின் கீழ், காவல் துறையில் காவலர்கள் முதல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கும்; தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்போர் முதல் கோட்ட அலுவலர்களுக்கும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் மூலமாக சொந்த வீடு கட்டித்தரும் வகையில் காஞ்சீபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூர் கிராமத்தில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழகத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்து, அக்கழகத்தின் மூலம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
வாழ்த்து
அதன்படி, முதற்கட்டமாக 26.10.12 அன்று மேலக்கோட்டையூரில் 2 ஆயிரத்து 673 குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். ‘‘உங்கள் சொந்த இல்லம்'' திட்டத்தின் கீழ் மேலக்கோட்டையூரில் 47.60 ஏக்கர் நிலத்தில், 20,50,150 சதுர அடி கட்டிட பரப்பளவில் 459 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 ஆயிரத்து 673 வீடுகளை முதல்வர் ஜெயலலிதா 25-ந் தேதி (நேற்று) காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
அந்த வீடுகளை சீருடைப் பணியாளர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 14 சீருடை பணியாளர்கள் குடும்பத்தினருக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கினார். மேலும், ‘‘புதிய இல்லத்தில் வளத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும்'' என்று பயனாளிகளை முதல்வர் வாழ்த்தினார்.
அடுக்குமாடி குடியிருப்புகள்
இப்புதிய குடியிருப்புகளில், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு நிகரான பதவி வகிப்பவர்களுக்கு ஆயிரத்து 100 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரை மற்றும் முதல் தளத்துடன் கூடிய 166 வீடுகள், உதவி ஆய்வாளர், ஆய்வாளர் மற்றும் அதற்கு நிகரான பதவி வகிப்பவர்களுக்கு 850 சதுர அடி கட்டிட பரப்பளவில் ஆயிரத்து 190 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள், காவலர், தலைமை காவலர் மற்றும் அதற்கு நிகரான பதவி வகிப்பவர்களுக்கு 650 சதுர அடி கட்டட பரப்பளவில் ஆயிரத்து 317 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்குடியிருப்புகளில் மின்தூக்கி, மழைநீர் சேகரிப்பு, தீயணைப்பு உபகரணங்கள், இடிதாங்கி, வாகன நிறுத்துமிடம், சூரிய சக்தியுடன் கூடிய தெருவிளக்கு, கான்கிரீட் சாலைகள், சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
காவல் நிலைய கட்டிடங்கள்:
சென்னை, கடலூர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல், ராமநாதபுரம், தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 202 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள் ஆயிரத்து 794 காவல் துறை குடியிருப்புகள்; அரியலூர் மாவட்டம் - தேளூர், கோயம்புத்தூர் மாவட்டம் - கருமத்தாம்பட்டி, கடலூர் மாவட்டம் - சிதம்பரம், திண்டுக்கல் மாவட்டம் - ஷாணார்பட்டி மற்றும் கீரணூர், ஈரோடு மாவட்டம் - புஞ்சைபுலியம்பட்டி, காஞ்சீபுரம் மாவட்டம் - படாளம், மனம்பதி, வாலாஜாபாத் மற்றும் சோமங்களம், கன்னியாகுமரி மாவட்டம் - கன்னியாகுமரி மற்றும் பூதபாண்டி, புதுக்கோட்டை மாவட்டம் - ஆலங்குடி, ராமநாதபுரம் மாவட்டம் - ராமேஸ்வரம் கோவில், சிவகங்கை மாவட்டம் - நாச்சியாபுரம், செட்டிநாடு மற்றும் திருகோஷ்டியூர், நீலகிரி மாவட்டம் - ஊட்டி மத்திய நகரம், திருவண்ணாமலை மாவட்டம் - மோரணம் மற்றும் பாச்சல், திருநெல்வேலி மாவட்டம் - தேவர்குளம், வேலூர் மாவட்டம் - வேலூர் தெற்கு, விழுப்புரம் ஆகிய இடங்களில் 13 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 23 காவல் நிலையங்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள சொ்த கட்டிடங்கள்;
இணைப்பு கட்டிடம்:
அரியலூரில் காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம், கடலூர் மாவட்டம் - திட்டக்குடி, பெரம்பலூர் மாவட்டம் - மங்களமேடு, சேலம் மாவட்டம் - வாழப்பாடி, தஞ்சாவூர் மாவட்டம் - ஒரத்தநாடு ஆகிய இடங்களில் காவல் துணை கண்காணிப்பாளர் குடியிருப்புடன் கூடிய முகாம் அலுவலகம்; கடலூர், திண்டுக்கல் மற்றும் மதுரையில் ஆயுதப்படை நிர்வாகக் கட்டிடங்கள், கடலூர் மாவட்டம் - தேவானம்பட்டினம் மற்றும் பரங்கிப்பேட்டை, புதுக்கோட்டை மாவட்டம் - மிமிசல், நாகப்பட்டினம் மாவட்டம் - திருமுல்லைவாசல், ராமநாதபுரம் மாவட்டம் - தொண்டி ஆகிய இடங்களில் கடலோரக் காவல் நிலையங்கள், கடலூர் மற்றும் வேலூரில் காவலர் மருத்துவமனைகள், மதுரையில் மாநகர காவல் அலுவலகம், தஞ்சாவூரில் மாவட்ட காவல் அலுவலகம், சிவகங்கையில் மாவட்ட காவல் அலுவலக இணைப்புக் கட்டிடம்;
காவலர் தங்குமிடம்:
கோயம்புத்தூரில் ஆயுதப்படை வளாகம், விழுப்புரத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கான விருந்தினர் இல்லம், ராமநாதபுரத்தில் காவலர்களுக்கான தங்குமிடம், மதுரை மாவட்டம் - இடையாப்பட்டியில் காவலர் பயிற்சிப் பள்ளி, ராமநாதபுரம் மாவட்டம் - திருவாடானை மற்றும் மதுரை மாவட்டம் - மேலூரில் திருப்பி (ரிப்பீட்டர்) நிலையங்கள், கோயம்புத்தூர் மாவட்டம் - வாளையார், ஈரோடு மாவட்டம் - ஆசனூர் ஆகிய இடங்களில் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு சோதனைச் சாவடிகள், என 43 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 26 காவல் துறை கட்டிடங்கள்;
சிறைத்துறையினர் குடியிருப்பு:
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் ஒரு கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறைத் துறையினருக்கான 25 குடியிருப்புகள்; சென்னை - எழும்பூரில் சிறைத்துறை தலைமையகக் கட்டிடம், திருவள்ளூர் மாவட்டம் - பூந்தமல்லியில் தனி கிளை சிறைக்கு கூடுதல் கட்டிடம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்ட மத்திய சிறைச்சாலைகளில் பெண்களுக்கான தனிச் சிறைகள்;
காஞ்சீபுரம் மாவட்டம் - மாவட்ட சிறையாக தரம் உயர்த்தப்பட்ட செங்கல்பட்டு கிளைச் சிறை, என 14 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 சிறைத் துறைக் கட்டிடங்கள்;
தீயணைப்பு அலுவலர்:
எழும்பூரில் 5 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குனர் அலுவலகக் கட்டிடம், திருவண்ணாமலை மாவட்டம் - சேத்துப்பட்டில் 47 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம்; சென்னை ஆலந்தூரில் 11 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்கக கட்டிடம்; என மொத்தம் 753 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத் துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.