தவறாக ஜெராக்ஸ் எடுத்ததால் ஆத்திரம்... மாணவியின் தலைமுடியை கொத்தாக பிடுங்கி எறிந்த வேலூர் ஆசிரியர்
வேலூர்: வேலூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவியின் தலைமுடியை கொத்தாக பிடுங்கி எறிந்த ஆசிரியர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேலுார் மாவட்டம், நாட்றம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவியருக்கு தமிழ்ப்பாடம் எடுத்து வருகிறார் கணேசன் என்ற ஆசிரியர். இவர் நேற்று மதியம் தனது வகுப்பு மாணவி சங்கவி என்பவரிடம் தமிழ் பாடத்தின் முக்கிய கேள்வி - பதில்கள் அடங்கிய தொகுப்பில் இருந்து, மூன்று பக்கங்களை மட்டும், 'ஜெராக்ஸ்' எடுத்து வரும்படி கூறியிருக்கிறார்.
ஆனால், அம்மாணவியோ தவறுதலாக அந்தத் தொகுப்பில் இருந்த அனைத்து பக்கங்களையும் ஜெராக்ஸ் எடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், மற்ற மாணவிகள் முன்னிலையிலேயே சங்கவியை திட்டியுள்ளார்.
பின் சங்கவின் முன்பக்க தலைமுடியைப் பிடித்து அவர் இழுத்துள்ளார். இதில் கொத்தாக ஒரு பகுதி முடிகள் அவரது கையோடு வந்து விட்டன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அம்மாணவி, வலியில் அலறியபடி மயங்கியுள்ளார்.
உடனடியாக முகத்தில் தண்ணீர் தெளித்து அம்மாணவியை எழுப்பிய கணேசன், இது தொடர்பாக யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.
ஆனால் மாலையில் வீடு திரும்பிய சங்கவி, பள்ளியில் நடந்ததை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கவியின் பெற்றோர், கணேசன் மீது நாட்றம்பள்ளி போலீசில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த திருப்பத்துார் கல்வி மாவட்ட அலுவலர் பிரியதர்ஷிணி, ஆசிரியர் கணேசன் மற்றும் மாணவி சங்கவியிடம் விசாரணை நடத்தியுள்ளார்.