செம்பருத்தி சீரியலுக்கு எதிராக திருப்பூர் போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார்!
சென்னை: 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி' என்ற நெடுந்தொடரால் மனம் புண்பட்டுள்ளதாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளார் வழக்கறிஞர் ஒருவர்.
இந்த தொடரில், கடவுள்களான ராமர் மற்றும் சீதையை அவமதிக்கும் காட்சிகள் இடம்பெற்றதாகவும், இதனால் இந்து மக்கள் மனது புண்பட்டுள்ளதாகவும், எனவே அந்த டிவி சேனல், தயாரிப்பாளர், இயக்குநர், நடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஈஸ்வர மூர்த்தி என்பவர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
செம்பருத்தி சீரியலில், ராமர்-சீதை சிலையை கீழே போட்டு உடைக்கும் வகையில் ஒரு காட்சி இருந்ததாக குறிப்பிட்டுள்ள ஈஸ்வர மூர்த்தி, இதன் மூலம் மக்கள் மத்தியில் அச்ச உணர்வுதான் அதிகரிக்கும் என குற்றம் சாட்டுகிறார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் இது தூண்டுவதாகவும், வருங்காலங்களில் இப்படி நடக்க கூடாது என புகார் அளித்ததாகவும் ஈஸ்வர மூர்த்தி கூறியுள்ளார்.