தமிழிசைக்கு கொலை மிரட்டல் வந்ததாக போலீசிடம் புகார்!
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொலை மிரட்டல் வந்ததாக சென்னை மாம்பலம் போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொலை மிரட்டல் வந்ததாக சென்னை மாம்பலம் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களையும் எதிர்ப்பவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் அரசியல் அரங்கிலும், சமூக வலைதளங்களிலும் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே மெர்சல் பட விவகாரத்திலும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை விமர்சித்தது உள்ளிட்ட விஷயங்களில் தமிழிசைக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு இன்று மீண்டும் கொலை மிரட்டல்கள் வந்திருப்பதாக அவர் தரப்பு வழக்கறிஞர் சென்னை மாம்பலம் போலீசிடம் புகார்அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வரவுள்ள நிலையில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.