டாஸ்மாக் பாரில் தகராறு... ஆட்டோ ஓட்டுநரை பாட்டிலை உடைத்து குத்திக் கொன்ற காவலர்
நெல்லை : ஆலங்குளம் அருகே டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை காவலர் ஒருவரே பாட்டிலால் குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருதகுளம் பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் சுரண்டை காவல் நிலையத்தில் காவலராகவும், ஜீப் ஓட்டுனராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ஆலங்குளம் ஊத்துமலை செல்லும் வழியில் நாச்சியார்புரம் விலக்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடைக்கு அனுமதிக்கப்பட்ட பார் கிடையாது என்பதால், அப்பகுதியில் உள்ள ஒருவர் சின்ன தகர ஷெட் போட்டு குளிர்பானங்கள் உள்ளிட்டவைகள் வைத்து மினி பார் நடத்தி வருகிறார்.
அங்கு காவலர் சண்முகசுந்தரம் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு நெட்டூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் இசக்கிமுத்து என்பவரும் இருந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தகராறு முற்றிய நிலையில் காவலர் சண்முகசுந்தரம் மதுபாட்டிலை உடைத்து ஆட்டோ ஓட்டுனர் இசக்கிமுத்துவை குத்தியுள்ளார். இதில் இசக்கிமுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இசக்கிமுத்து உயிரிழந்தார்.
இதையடுத்து, காவலர் சண்முகசுந்தரம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆட்டோ ஓட்டுநரை சட்டத்தை காக்க வேண்டிய காவலர் ஒருவரே மது பாட்டிலால் குத்திக் கொன்ற சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.