கொத்து கொத்தாக கைது... முதலில் 70.. இப்போது 53... இன்னும் அடங்காத ரவுடிகள் கொட்டம்!
கொத்து கொத்தாக ரவுடிகள் கைது செய்யப்படுவதை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரவுடிகள் கும்பல் கும்பலாக கைது செய்யப்படுவதை பார்க்கும் மக்கள் இத்தனை ரவுடிகளா என்று அச்சம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் அட்டகாசம் தலைதூக்கியுள்ளது. வழிபறி, கொள்ளை, கொலை, ஆட்கடத்தல், உறுப்பு திருட்டு என சட்டவிரோத செயல்களில் அவர்கள் ஈடுபட்டுவிட்டு தலைமறைவாகின்றனர்.
அவர்களை கைது செய்வது என்பது போலீஸாருக்கு சவாலான காரியமாகிறது. பிப்ரவரி 6-ஆம் தேதி ரவுடி பினுவின் பிறந்தநாள் ஆகும்.
கூட்டாளி
இவர் மீது கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், போதை பொருள் கடத்தல் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தனக்கு போட்டியாக உள்ள மற்றொரு ரவுடி ராதாகிருஷ்ணனை போட்டு தள்ள ரவுடி பினு தனது கூட்டாளிகளுடன் திட்டமிட்டார்.
70 ரவுடிகள் கைது
இதற்காக பூந்தமல்லியில் ஒரு லாரி ஷெட்டில் வைத்து பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது. இதில் அரிவாளை கொண்டு கேக்கை வெட்டினார் பினு. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் குடித்துவிட்டு ஆட்டம் போட்டனர். இதை முன்கூட்டியே அறிந்த போலீஸார் அவர்களை மலையாம்பட்டு பகுதியில் சுற்றி வளைத்தனர். இதில் 70 ரவுடிகளை போலீஸார் கைது செய்தனர்.
53 ரவுடிகள் கைது
சென்னையில் கொத்து கொத்தாக ரவுடிகள் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை ரவுடிகள் திருவள்ளூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீஸார் சோதனை நடத்தினர். இதில் 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
அடக்க வேண்டும்
இதுமட்டுமல்லாமல் இன்னும் ஏராளமான ரவுடிகள் ஆங்காங்கே பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அன்று 70 ரவுடிகளும், இன்று 53 ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இன்னும் கைதாகாத ரவுடிகளையும் கைது செய்து அவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.