காவிரி: அண்ணா நினைவிடம் நோக்கி பேரணி சென்ற எதிர்கட்சியினர் கைது - மாலையில் விடுவிப்பு
அண்ணாசாலையில் ஸ்டாலின் தலைமையில் பேரணியாக சென்ற எதிர்கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Recommended Video
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் பேரணியாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து மண்டபத்தில் தங்கவைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக தலைமையில் எதிர்கட்சியினர் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
இந்த போராட்டத்திற்கு வணிகர் சங்கங்கள், போக்குவரத்து சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தன.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காலை முதலே கடைகள் அடைக்கப்பட்டன. ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கப்படாத காரணத்தால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சாலைகளிலும் ரயில் நிலையங்களிலும் எதிர்கட்சித்தலைவர்கள், தொண்டர்களே நிறைந்திருந்த காரணத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாலையில் கடைகள் திறக்கப்பட்டதால் இயல்பு நிலை திரும்பியது.
தலைவர்கள் மறியல்
காலையில் அண்ணா சாலையில் ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. சாலையில் அமர்ந்து மு.க. ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
திடீர் பேரணி
திடீரென அனைவரும் கறுப்புக்கொடியேந்தி பேரணியாக செல்ல முயற்சி செய்தனர். வாலாஜா சாலையில் வழியாக மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் நோக்கி பேரணியாக சென்ற அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தவே பதற்றம் ஏற்பட்டது.
போலீஸ் தடுப்பு
காவல்துறையினருக்கும், பேரணியாக சென்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தடுப்பை மீறி பேரணியாக செல்ல முயன்றனர். இதனையடுத்து காவல்துறையினர் தடியடிக்கு தயாராகவே பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் போலீசின் தடையை மீறி உதயநிதி ஸ்டாலின் பேரணியாக சென்றார். தடுத்து நிறுத்தப்பட்ட அனைவரும் மீண்டும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதோடு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
காலையில் கைது - விடுதலை
இதனையடுத்து ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஸ்டாலினை குண்டு கட்டாக தூக்கிச் சென்று போலீசார் வேனில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். எதிர்கட்சியினர் பேரணி, சாலை மறியல் காரணமாக அண்ணாசாலை, மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. அலுவலகம் செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகினர்.