விபத்துக்குள்ளான முதல்வரின் பாதுகாப்பு வாகனம்.. போலீஸ்காரர்களுக்கு காயம்.. கன்னியாகுமரியில் பரபரப்பு
கன்னியாகுமரியில் முதல்வர் பாதுக்காப்பு பணிக்கு சென்ற வாகனம் பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது .
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வரின் பாதுகாப்பிற்காக சென்ற காவல்துறை வாகனம் விபத்தில் சிக்கியது.
கன்னியகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிப்படைந்த பகுதிகளையும், காணாமல் போன மீனவர்களின் மீட்பு பணி குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கன்னியாகுமரி ஆய்வு செய்தார்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வந்துள்ள முதல்வரின் பாதுகாப்பிற்காக பிற மாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் மற்றும் காவல்துறை வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
அதில், முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்ட காவல்துறை வாகனம் ஒன்று கன்னியாகுமரி - மதுரை நெடுஞ்சாலையில் விமானநிலையம் சென்று கொண்டிருந்தபோது, ஆயர்குளம் அருகே தனியார் பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அந்த காவல்துறை வாகனத்தில் பயணித்த உதவி ஆய்வாளர் ஈஸ்வரமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், முத்துகிருஷ்ணன் மற்றும் மகேந்திரன் எனும் இரண்டு காவலர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டு உள்ளது. காயமடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.