முதியோர்களை குழந்தைகளாக பார்த்துக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.. அசத்தும் காவல்துறை அதிகாரி!
தனிமையில் உள்ள முதியோர்களை குழந்தைகளாக பார்த்துக்கொள்ள காவல்துறையினர் தயாராக இருப்பதாக விழுப்புரம் சரக காவல்துறை துணை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்: தனிமையில் உள்ள முதியோர்களை குழந்தைகளாக பார்த்துக்கொள்ள காவல்துறையினர் தயாராக இருப்பதாக விழுப்புரம் சரக காவல்துறை துணை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இளம்பெண்கள் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது பெரும் சமூகபிரச்சனையாக இருந்து வருகிறது. இதில் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவிகள் பலர் சமூக வலைதளங்களில் வரக்கூடிய செய்திகளையும், சினிமாக்களில் வரக்கூடிய வாழ்க்கைக்கு ஒவ்வாத காதலை நம்பியும் தங்களது வாழ்க்கையை சீரழித்துக்கொள்வது வழக்கமாக உள்ளது.
கடுமையான சட்டம் பாயும்
ஆணுக்கு 21ம், பெண்ணுக்கும் 18 திருமண வயது என்ற நிலை தற்போது உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணை காதலித்து தன்னுடைய கட்டுப்பாட்டில் உடலளவில் வைத்திருக்கும் பட்சத்தில் கடுமையான சட்டம் பாயும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் விழிப்புணர்வு
மேலும் 18 வயதுக்குறைவாக உள்ள பெண்ணை 21 வயதுக்குறைவாக உள்ள ஒரு ஆணுக்கு திருமணம் நடக்கூடும் பட்சத்தில் குழந்தை திருமண தடுப்புச்சட்டம் பாயும். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பெண் காவல் அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளிகளாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் விரும்பினால்..
மேலும் ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. இதே போல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் காவல்துறை அதிகாரிகள் மாணவர்களிடம் பேசவேண்டுமென விரும்பினால் அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.
தனிமையால் தற்கொலை
மேலும் கடந்த 19ம் தேதி வயதான கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்டது மனவறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிமையில் இருந்ததால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
குழந்தைகளைப் போல்..
விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் இருக்கும் முதியோர்கள் இனி தனிமையில் துணையில்லாமல் இருந்தால் வறுத்தப்பட தேவையில்லை. காவல்துறை உங்களை பாதுகாத்துக்கொள்ளும், உங்கள் குழந்தைகளைப்போல் பார்த்துக்கொள்ள தயாராக இருக்கிறோம்.
உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்
அருகிலுள்ள காவல்நிலையங்களுக்கு செல்போன் அல்லது நேரடியாகவோ, தெரிந்தவர்கள் மூலமாக விவரங்களை அளித்தால் போதும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.