சென்னை ஐஐடி வளாகத்தில் போலீஸ் குவிப்பு.. போராட்டங்களை ஒடுக்க நடவடிக்கை!
சென்னை ஐஐடி வளாகத்தில் போராட்டங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: ஐஐடி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தப்போவதாக வெளியான தகவலை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ஐஐடியில் மாட்டு இறைச்சி சாப்பிடும் போராட்டம் நடத்திய மாணவர் சூரஜ் நேற்று தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் மாணவரின் கண்பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை இந்துத்துவா மாணவர்கள் தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. இறைச்சிக்காக மாடுகளை விற்பது தடை செய்யப்படுவதாக கடந்த 26ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசின் இந்த உத்தரவை அமல்படுத்தப்போவதில்லை என்று கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்தன. தமிழகத்திலும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பல்வேறு அமைப்புகள் மாட்டுக்கறி விருந்து வைத்து தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றன. கடந்த 28ம் தேதி ஐஐடி வளாகத்தில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஒன்று திரண்டு மாட்டு இறைச்சி சாப்பிடும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை சேர்ந்த 70 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். ஓட்டலில் தயார் செய்யப்பட்ட மாட்டு இறைச்சி உணவை வாங்கி வந்து ஐஐடி வளாகத்தில் சாப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதில் சூரஜ் என்ற மாணவரும் கலந்து கொண்டு மாட்டு இறைச்சி சாப்பிட்டுள்ளார். இதனைக் கண்டித்து மற்றொரு பிரிவு மாணவர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தற்போது பூதாகரமாகியுள்ளது. மாணவர் மீதான தாக்குதலைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஐஐடி முன்பு போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியானது.
இதையடுத்த மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணா தலைமையில் ஐஐடி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.