பத்திரிக்கையாளர்களை கூட சந்திக்கவிடாமல் இளைஞர்களை தரதரவென இழுத்துச்சென்ற போலீஸ்!
சென்னை கத்திப்பாரா பாலத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதராவாக கத்திப்பாரா பாலத்துக்கு பூட்டுப்போட்டு இளைஞர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது பத்திரிக்கையாளர்களை கூட சந்திக்க விடாமல் இயக்குனர் கவுதம்மன் உள்ளிட்டோரை போலீசார் தரதரவென இழுத்துச்சென்றனர்.
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் நாள்தோறும் நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு வட மாநில விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசு மட்டும் விவசாயிகளின் போராட்டத்தை கண்டும் காணாமல் உள்ளது. இதனால் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மெரினாவில் கெடுபிடி
ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும இளைஞர்கள் சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் அங்கு நூற்றுக்கணக்கான போலீசாரை குறித்து தடுப்புகளை ஏற்படுத்தி கடும் கெடுபிடிகளை காட்டி மாணவர்களை ஒன்று கூடாமால் செய்தது தமிழக அரசு.
போராட முடியாத நிலை
திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் அண்மையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட முடியாத நிலை ஏற்பட்டது.
மேம்பாலத்துக்கு பூட்டு
இந்நிலையில் சென்னை கத்திப்பாரா ஜங்கஷனில் திரண்ட இளைஞர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர் கவுதம்மன் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். அப்போது கத்திப்பார பாலத்துக்கு பூட்டு போட்ட அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
போராடி உடைத்த போலீஸ்
இதனால் 8 போன்ற வடிவத்தில் உள்ள மேம்பாலாம் முழுவதும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பூட்டை படாதபாடுபட்டு உடைத்து போக்குவரத்துக்கு வழி செய்தனர்.
குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று..
இதையடுத்து மாணவர்களிடம் போராட்டத்தை கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மாணவர்கள் மறுத்ததால் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
செய்தியாளர்களை சந்திக்கக்கூட..
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கவுதம்மன் உள்ளிட்டோரையும் சந்திக்க கூட விடாமல் தரதரவென போலீசார் இழுத்துச் சென்றனர். இந்த போராட்டத்தால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.