தூத்துக்குடி மருத்துவமனை சென்ற ஓபிஎஸ்.. செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்காத போலீஸ்..
தூத்துக்குடி மருத்துவமனைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்ற போது, உள்ளே பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடி மருத்துவமனைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்ற போது, உள்ளே பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இதில் சென்ற வார போராட்டத்தின் போது மக்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியது. போராட்டம் செய்த அப்பாவி மக்கள் மீது போலீஸ் மூர்க்கமாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியது.
இந்த மோசமான தாக்குதல் காரணமாக 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் காயமடைந்தவர்கள் எல்லோரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
காலை தூத்துக்குடியில் சிகிச்சை பெறும் மக்களை சந்தித்தார் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம். ஆனால் தூத்துக்குடி மருத்துவமனைக்கு உள்ளே பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்கள் வாசல்களிலேயே நிறுத்தப்பட்டனர். மேலும் துணை முதல்வரை சுற்றி மிகவும் பெரிய அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஏற்கனவே அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று தூத்துக்குடி மருத்துவமனையில் மக்களை சந்தித்த போது, கோபத்தில் இருந்த மக்கள் அவரை விடாமல் கேள்விகளால் துளைத்தனர். மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கடம்பூர் ராஜு பாதியில் வெளியேறினார் . உள்ளே இருந்த பத்திரிகையாளர்கள் இதை வீடியோவாக வெளியிட்டனர்.
இதே நிலைமை பன்னீர்செல்வத்திற்கும் வரக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்திரிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் மருத்துவமனைக்கு உள்ளே என்ன நடந்தது என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்திய போது, பத்திரிக்கையாளர்களின் உதவியை மட்டுமே கேட்டு இருந்தார். இப்போது பிரச்சனை என்றவுடன், மக்களுக்கு எதிராகவும், பத்திரிக்கையாளர்களுக்கு எதிராகவும் செயல்பட்டுள்ளார்.