விநாயகர் சதுர்த்தி, விநாயகர் சிலை பிரதிஷ்டை, சிலை கரைப்பு.. சென்னை புறநகரில் குவிக்கப்படும் போலீஸார்
சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை புறநகர்ப் பகுதிகளில் வைக்கப்படவுள்ள விநாயகர் சிலைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான நடவடிக்கை குறித்து போலீஸார் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளனர்.
செப்டம்பர் 17ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி இந்து அமைப்புகள் தெரு முனைகள், பொது இடங்களில் சிலைகள் வைக்கத் தயாராகி வருகின்றனர். இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட பல இந்து அமைப்பினர், கட்சிகள் இதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் 2100 சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது கூடுதலாக சிலைகள் வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாம். இதை ஏற்று இந்த ஆண்டு 2500 சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி கொடுத்துள்ளதாம்.
விநாயகர் சிலை ஊர்வலமானது செப்டம்பர் 20ம் தேதி முதல் 3 நாட்களுக்கு பிரித்து நடைபெறும். இந்த 3 நாட்கள் மட்டுமே விநாயகர் சிலைகளை, காவல்துறை அனுமதித்த பகுதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க அனுமதிக்கப்படும்.
இது தொடர்பாக உதவி கமிஷனர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எத்தனை இடங்களில் சிலைகள் வைக்கப்படவுள்ளன எந்தெந்த அமைப்பினர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர் என்பதை அந்தந்த பகுதி உதவி கமிஷனர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
அதன் பின்னர் போலீஸ் கமிஷனருடன் ஆலோசனை நடைபெறும். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் முடிவெடுப்பர்.