கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்களிடம் டிஎஸ்பி விசாரணை.. போலீசார் குவிப்பு
கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்களிடம் இன்றும் டிஎஸ்பி எட்வர்ட் விசாரணை நடத்தி வருகிறார். அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களிடம் டிஎஸ்பி எட்வர்ட் தலைமையில் விசாரணை தொடங்கியது. அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்று நம்பி அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானதையடுத்து சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபை குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது தலைமையில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரப்பட்டது.
எது எப்படி இருந்தாலும் நாங்கள் செய்வதைத்தான் செய்வோம் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசின் முடிவால் ஆளுநர் அமைதி காத்து வருகிறார். இதனால் கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்கள் 9வது நாளாக இன்றும் ரிசார்ட்டில் அடைபட்டுக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், கூவத்தூரில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்ததாகக் கூறிய எம்எல்ஏ சரவணன், சசிகலா தரப்பினரால் கடத்தி செல்லப்பட்டு எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அதிமுக சட்டசபைக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் காவல் நிலையத்தில் ஆள்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நேற்று பிற்பகல் 12 மணியளவில் ரிசார்ட்டிற்கு சென்ற போலீசார் எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர், அங்குள்ள எம்எல்ஏக்கள் அனைவரும் தாங்கள் சுதந்திரமாக இருப்பதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்கள்.
இந்நிலையில், இன்று கூவத்தூர் ரிசார்ட்டுக்கு வந்த டிஎஸ்பி எர்வர்ட் அதிமுக எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். எம்எல்ஏக்கள் தங்கி இருக்கும் ரிசார்ட்டில் போடப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கூவத்தூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.