மாயமாகிப் போன மதன்.. ராகவா லாரன்சிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸ்!
சென்னை: தயாரிப்பாளர் மதன் மாயமான வழக்குத் தொடர்பாக, நடிகர் ராகவா லாரன்சிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு மணி நேர விசாரணை நடத்தியது சினிமா வட்டாரத்த்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல வேந்தர் மூவிஸ் பட நிறுவனத்தை நடத்தி வந்தவர் மதன். இந்நிறுவனத்தின் சார்பில் இதுவரை 15 திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாயும்புலி உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்தார். இவரது நிறுவனம் சார்பாக வெளியிட்ட படங்கள் பெரிதாக வரவேற்பில்லை. இதனால் பொருளாதார ரீதியாக நஷ்டத்தில் தவித்து வந்தார் மதன்.
இந்நிலையில் கடந்த மாதம் திடீரென மாயமானார் அவர். ‘தான் கங்கையில் சமாதியாகப் போவதாக' அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பச்சமுத்துவுக்காக...
மேலும் அந்தக் கடிதத்தில் அவர், ‘‘எனக்கும் எஸ்.ஆர்.எம்.குழும தலைவர் பச்சமுத்துவுக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. அவருக்காகவே வேந்தர் மூவிஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். ஏராளமான படத்தை தயாரித்தேன். விநியோக உரிமையும் செய்தேன். அவரது வேந்தர் டிவிக்கு நான் தயாரித்த படத்தை இலவசமாகவே கொடுத்தேன். அவர் நடத்திவரும் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை இதுவரை நான்தான் பார்த்து வந்தேன். என் மூலமாகவே பலரும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர்.
பண விவகாரம்...
இந்த ஆண்டும் மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பிய 100க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வாங்கினேன். அந்தப் பணத்தை எஸ்.ஆர்.எம்.குழுமத்திடம் கொடுத்து விட்டேன். தேர்தலுக்கு பச்சமுத்துவின் வேட்பாளர்களுக்காக செலவு செய்தேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
போலீசில் புகார்...
ஆனால், மதனின் மோசடிகளுக்கும், தமது நிறுவனத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை' என, எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் மறுப்புத் தெரிவித்தார். இதற்கிடையே மாயமான மதனைக் கண்டுபிடித்துத் தரும்படி அவரது அம்மா மற்றும் மனைவி போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி மதனை கண்டுபிடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
60 புகார்கள்...
இதற்கிடையில், மதன் மீது சுமார் 60க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் எஸ்.ஆர்.எம். பச்சமுத்து மீதும் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளனர். இதனால் மதன் மற்றும் பச்சமுத்து மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை...
மதனை கண்டுபிடிக்க மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
செக் பறிமுதல்...
மதனின் அலுவலகத்தில் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் நேற்று நடத்திய சோதனையில், ஏராளமான வங்கி டிராப்ட், செக் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவைகள் எல்லாம் எஸ்.ஆர்.எம்.குழுமத்திற்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்தவை ஆகும். இதன் மூலம் எஸ்.ஆர்.எம்.குழுமத்துக்கும் மதனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
ராகவா லாரன்ஸ்..
இந்நிலையில் மதனின் நெருங்கிய நண்பராக கருதப்படும் இயக்குநர் மற்றும் நடிகருமான ராகவா லாரன்சிடம் நேற்று இரவு மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணையானது சுமார் 2 மணி நேரம் நடந்தது. அப்போது மதன் மற்றும் எஸ்.ஆர்.எம்.தொடர்பு குறித்து தீவிர ராகவா லாரன்சிடம் விசாரணை நடத்தப்பட்டதாக மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொட்ட சிவா கெட்ட சிவா...
ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வரும் மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் நாகா ஆகிய இருபடங்களையும் மதன் தான் தயாரித்து வந்தார். இந்தப் படங்களுக்காக அவர் கொடுத்த ரூ. 1 கோடி அட்வான்ஸ் பணத்தைத் தான், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் செயல்படும் பசுமை திட்டத்துக்காக ராகவா லாரன்ஸ் நன்கொடையாக வழங்கினார். மாயமான மதனைத் தேடி அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரோடு லாரன்ஸும் வாரணாசி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.